சனாதனம் குறித்த பேச்சு…உதயநிதி நேரில் ஆஜராக #SupremeCourt விலக்கு!

சனாதனம் குறித்து பேச்சுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் ஆஜராக தேவை இல்லை என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர், கலைஞர்கள் சங்கம் சார்பில் சென்னை காமராஜர் அரங்கில்…

Udhayanidhi's speech on Sanathanam... no investigation allowed in Tamil Nadu!

சனாதனம் குறித்து பேச்சுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் ஆஜராக தேவை இல்லை என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர், கலைஞர்கள் சங்கம் சார்பில் சென்னை காமராஜர் அரங்கில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம்  ‘சனாதன ஒழிப்பு மாநாடு நடைபெற்றது. இதில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டார். இதில் பேசிய அவர்,“இந்த மாநாட்டின் தலைப்பே மிகவும் சிறப்பாக அமைந்திருக்கிறது. சனாதன எதிர்ப்பு மாநாடு’ என்று போடாமல், `சனாதன ஒழிப்பு மாநாடு’ என்று போட்டிருக்கிறீர்கள். அதற்கு என்னுடைய வாழ்த்துகள். சிலவற்றை நாம் ஒழிக்கத்தான் வேண்டும். எதிர்க்க முடியாது. கொசு, டெங்கு காய்ச்சல், மலேரியா, கொரோனா ஆகியவற்றையெல்லாம் நாம் எதிர்க்கக் கூடாது. ஒழித்துக்கட்ட வேண்டும். அப்படித்தான் சனாதனம்’” என்று பேசி இருந்தார்.

இவரின் பேச்சுக்கு பாஜகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மீது ராஜஸ்தான், உ.பி. மற்றும் காஷ்மீர் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் உள்ள காவல் நிலையங்கள் புகாரும், நீதிமன்றங்களில் வழக்குகளும் தொடர்ந்தனர்.

இந்த வழக்குகளை எல்லாம் ஒரே வழக்காக இணைக்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் உதயநிதி ரிட் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை கடந்த ஏப்ரல் 1ஆம் தேதி உச்ச நீதிமன்றம் விசாரித்தது. ரிட் மனுவில் திருத்தம் செய்ய உதயநிதி ஸ்டாலினுக்கு 3 வாரங்கள் அவகாசம் அளித்து, விசாரணையை மே 6-ம் தேதிக்கு தள்ளி வைத்தது. ரிட் மனு தொடர்பாக பதிலளிக்க மகாராஷ்டிரா, உத்தரப்பிரதேசம், பீகார், ஜம்மு-காஷ்மீர், கர்நாடக மாநில அரசுகளுக்கும், புகார்தாரர்களுக்கும் பதிலளிக்க வேண்டும் என கடந்த மே 10-ம் தேதி உத்தரவிட்டு விசாரணையை தள்ளிவைத்தது .

இந்நிலையில் இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது அமைச்சர் உதயநிதி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் வில்சன், பாதுகாப்பு கருதி அனைத்து வழக்குகளையும் ஒன்றாக சேர்த்து விசாரிக்கக் கோரினார். அதற்கு நீதிபதிகள், “அனைத்து FIRகளும் வெவ்வேறு குற்றங்கள் அடிப்படையில், பதிவு செய்யப்பட்டுள்ளது. எனவே தனியாகத்தான் விசாரிக்கப்பட வேண்டும். அதேசமயம் தமிழ்நாட்டில் விசாரிக்க அனுமதிக்க முடியாது. வேறு மாநிலத்தில் உள்ள உயர்நீதிமன்றத்தில் தான் விசாரணைக்கு அனுமதிக்க முடியும்” என தெரிவித்தனர்.

தொடர்ந்து மனுதாரர்களுக்கு நோட்டீஸ் அனுப்பவும், நவம்பர் 18 ஆம் முன் பதிலளிக்கவும் உத்தரவிட்டனர். மேலும் வழக்குகளில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரடியாக ஆஜராக தேவை இல்லை எனவும் விலக்கு அளித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.