மதுபோதையில் ரயில்வே தண்டவாளத்தில் படுத்து உறங்கிய ரவுடி உட்பட இருவர் சரக்கு ரயில் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
தூத்துக்குடி 3வது மைல் மேம்பாலம் கீழே சரக்கு ரயிலில் அடிபட்டு 3 பேர் கிடப்பதாக ரயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற ரயில்வே போலீசார் அங்கு ரயிலில் அடிபட்டு உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த பணகுடியை சார்ந்த குழந்தை துரை மகன் ஜெபசிங் (27) என்பவரை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மற்ற இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததால், இருவரது உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், 3 பேரும் மது போதையில் ரயில்வே தண்டவாளத்தில் படுத்து உறங்கியது தெரியவந்தது. இறந்தவர்களில் ஒருவர் திரு.வி.க நகரைச் சேர்ந்த மாரிமுத்து (23). இவர் மீது தூத்துக்குடி தெற்கு மற்றும் சிப்காட் காவல் நிலையங்களில் 2 கொலை வழக்குகள் உள்ளது. குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டு 2 மாதங்களுக்கு முன்பு வெளியே வந்தவர்.
இவருடன் தூத்துக்குடி பசும்பொன் நகரை மகன் மாரிமுத்து, ஜெபசிங் ஆகியோர் நேற்று இரவு P&T காலணியில் நடைபெற்ற திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். பின்னர் 3 பேரும் சேர்ந்த இரவு 10 மணியளவில் பாலத்தின் அடியில் வைத்து மது அருந்தியுள்ளனர். அப்போது மதுபோதை அதிகமானதைத் தொடர்ந்து அவர்கள் 3 பேரும் எழுந்திருக்க முடியாமல் ரயில்வே தண்டவாளத்தில் படுத்து உறங்கியது தெரியவந்தது.
இன்று அதிகாலை 3 மணி அளவில் தூத்துக்குடி துறைமுகத்திலிருந்து ஆந்திராவிற்கு சரக்கு ஏற்றிச் சென்ற ரயில் இவர்கள் மீது ஏறியதில் சம்பவ இடத்தில் மாரிமுத்து என்ற பெயர் கொண்ட இருவரும் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். ஜெபசிங் படுகாயத்துடன் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார். இதுகுறித்து ரயில்வே இருப்புப்பாதை ஆய்வாளர் செல்வி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.