படப்பிடிப்பு தளத்தில் இருந்த மேக்கப் அறையில் டி.வி நடிகை உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவத்தில், நடிகையின் முன்னாள் காதலனும் நடிகருமான ஷீஷன் கான் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்தி மொழி டி.வி. தொடர்களில் நடித்து பிரபலமாகி வந்தவர் இளம் நடிகை துனிஷா சர்மா. இவர் தற்போது ‘அலிபாபா தஸ்தான் இ-காபூல்’ என்ற டி.வி. தொடரில் நடித்து வந்தார். இதற்கான படப்பிடிப்பு மும்பையை அடுத்த வசாய் பகுதியில் உள்ள ஸ்டூடியோவில் நடந்தது. படப்பிடிப்பின் இடைவேளையின் போது, நடிகை துனிஷா அங்குள்ள மேக்அப் அறையின் குளியலறைக்கு சென்றார். நீண்ட நேரமாகியும் அவர் கதவை திறக்காததால் சந்தேகம் அடைந்த படக்குழுவினர், கதவை உடைத்து உள்ளே பார்த்தனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அப்போது நடிகை துனிஷா தூக்கில் தொங்கியபடி கிடந்தார். ஆனால் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். விரைந்து வந்த போலீசார் விசாரணை நடத்தினர். உயிரை மாய்த்துக் கொண்ட நடிகை துனிஷா தனது 13-வது வயதில் ‘பாரத் கா வீர் புத்ரா, மகாராணா பிரதாப்’ என்ற தொடரில் நடித்துள்ளார். இஷ்க் சுபான் அல்லா, கப்பார் பூஞ்ச்வாலா, சக்ரவர்த்தி அசோகா சாம்ராட் உள்ளிட்ட டிவி தொடர்களிலும், பிதூர், பார் பார் தேகோ, தபாங் -3 போன்ற இந்திப்படங்களிலும் நடித்துள்ளார்.
சின்னத்திரையில் பிரபலமாகி வந்த நடிகை துனிஷா திடீரென உயிரை மாய்த்து கொண்ட சம்பவம் ரசிகர்களிடையே அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது. நடிகை துனிஷா உயிரிழப்புக்கு முன்பு கடிதம் எதையும் எழுதி வைக்கவில்லை என்று போலீசார் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் துனிஷாவும், உடன் நடித்து வந்த டி.வி. நடிகர் ஷீஷன் கான் என்பவரும் காதலித்து வந்தது தெரியவந்தது.
கடந்த சில நாட்களாகவே துனிஷா படப்பிடிப்பு தளத்தில் சோகமாகவே காணப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதற்கிடையே துனிஷாவின் தாயார் போலீசில் அளித்த புகாரில், தனது மகள் உயிரிழப்புக்கு காதலன் ஷீஷன் கான் தான் காரணம் என கூறியிருந்தார். 15 நாட்களுக்கு முன் இவர்களிடையே காதல் முறிவு ஏற்பட்டதாகவும் புகாரில் தெரிவித்திருந்தார்.
இதையடுத்து வாலிவ் போலீசார் நடிகை துனிஷாவின் காதலன் ஷீஷன் கானை அதிரடியாக கைது செய்தனர். அவர் மீது உயிரிழப்புக்கு தூண்டியதாக வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் அவரை நீதிபதி முன் ஆஜர்படுத்தினர். அப்போது 4 நாட்கள் போலீஸ் காவலில் ஒப்படைத்து நீதிபதி உத்தரவிட்டார். நடிகர் ஷீஷன் கான், ‘ஜோதா அக்பர்’ படத்தில் இளம் வயது அக்பராக நடித்தவர். பல்வேறு நாடகங்களில் நடித்துள்ள இவர், துனிஷாவுடன் இணைந்து நடித்த போது கிசுகிசுக்களில் சிக்கி வந்தது குறிப்பிடத்தக்கது.