பெங்களூரு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சசிகலா, அவசர சிகிச்சைப் பிரிவில் இருந்து சாதாரண பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார்.
சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்ட சசிகலா, தண்டனை காலம் முடிவடைந்து வரும் 27 ஆம் தேதி விடுதலையாக உள்ளார். இந்த நிலையில் சசிகலாவுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டதாக, பெங்களூரு பார்ப்பன அக்ரஹார சிறை அதிகாரிகள் வட்டாரத்தில் இருந்து தகவல் வெளியானது. சிறை வளாகத்தில் முதற்கட்ட பரிசோதனை மேற்கொண்டபோது சசிகலாவுக்கு காய்ச்சல் இருந்தது தெரியவந்தது. இதனையடுத்து, அவர் பெங்களூரு சிவாஜி நகரில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லப்பட்டார். ஆம்புலன்ஸில் அழைத்துச்செல்லப்பட்ட அவர், சர்க்கர நாற்காலியில் வைத்து வார்டுக்கு அழைத்துச் செல்லப்பட்டார். இதையடுத்து சசிகலாவுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. சிகிச்சைக்குப் பிறகு சசிகலாவிற்கு ரத்த அழுத்தம், ஆக்சிஜன் அளவு சீராக உள்ளது என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. என்றாலும் மூச்சுத் திணறல் இருந்ததாலும் காய்ச்சல் இருப்பதாலும் மருத்துவர்கள் அவரை தொடர்ந்து கண்காணித்து வரும் நிலையில் சசிகலா அவசர சிகிச்சைப் பிரிவில் இருந்து சாதாரண பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார்.
இதனிடையே பெங்களூருவில் இன்று சசிகலாவை பார்க்க சென்ற டிடிவி தினகரன், பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, சசிகலாவுக்கு கொரோனா இல்லை என்றும், அவருக்கு ஆக்ஸிஜன் அளவு குறைவாக உள்ளது என தகவல் தெரிவித்துள்ளார்.







