யூடியூபர் TTF வாசன் இரண்டாவது முறையாக தாக்கல் செய்த ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து காஞ்சிபுரம் மாவட்ட அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
டிடிஎஃப் வாசன் என்பவர் இருசக்கர வாகன சாகச பயணத்தின் மூலம் யூடியூப்பில் பிரபலமானவராக அறியப்படுகிறார். யூடியூப்பில் தனி ரசிகர் பட்டாளத்தைக் கொண்டுள்ள இவர் அடிக்கடி அதிவேகமாக பயணம் செய்து சாகசங்களை மேற்கொண்டு வருவார். அதன்படி, காஞ்சிபுரத்திற்கு அருகே சென்னை – பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் தன் இருசக்கர வாகனத்தின் முன் சக்கரத்தைத் தூக்கி சாகசம் செய்தார்.
அப்போது, கட்டுப்பாட்டை இழந்த வாகனம் 2 முறை தலைகீழாக சுழன்று விழுந்தததில் டிடிஎஃப் வாசன் படுகாயமடைந்தார். மக்களுக்கு ஆபத்து ஏற்படுத்தும் வகையில் வாகனம் ஓட்டியதற்காக 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு டிடிஎஃப் வாசன் கைது செய்யப்பட்டார். இந்த நிலையில், கைது செய்யப்பட்ட டிடிஎஃப் வாசன் காஞ்சிபுரத்தில் உள்ள குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் வகையில் வாகனத்தை இயக்கியது, கவனக்குறைவாக செயல்படுதல் உள்ளிட்ட 5 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு டிடிஎஃப் வாசன் கைது செய்யப்பட்டார். இதையடுத்து 14 நாட்கள் நீதிமன்ற காவலில் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்நிலையில், யூடியூபர் TTF வாசன் இரண்டாவது முறையாக தாக்கல் செய்த ஜாமின் மனு காஞ்சிபுரம் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுவை விசாரித்த நீதிபதி, அதனை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.







