திரிபுரா சட்டப்பேரவைத் தேர்தல்: வாக்குப்பதிவு தொடங்கியது

60 தொகுதிகளை கொண்ட திரிபுரா சட்டப்பேரவை தேர்தல் ஒரே கட்டமாக இன்று நடக்கிறது. இதற்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. 3 மாநில தேர்தல் திரிபுரா, நாகாலாந்து, மேகாலயா ஆகிய 3…

60 தொகுதிகளை கொண்ட திரிபுரா சட்டப்பேரவை தேர்தல் ஒரே கட்டமாக இன்று நடக்கிறது. இதற்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது.

3 மாநில தேர்தல்

திரிபுரா, நாகாலாந்து, மேகாலயா ஆகிய 3 வடகிழக்கு மாநிலங்களுக்கும் சட்டப்பேரவை தேர்தல்கள் அறிவிக்கப்பட்டன. முதல் கட்டமாக இன்று, திரிபுரா மாநிலத்திற்கு சட்டப்பேரவை தேர்தல் நடக்கவுள்ளது. 60 இடங்களை கொண்டுள்ள சட்டப்பேரவைக்கு இன்று ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படுகிறது.

திரிபுரா தேர்தல்

இங்கு தற்போது பாஜக ஆட்சியில் உள்ளது. ஆட்சியைத் தக்க வைக்க பா.ஜ.க. முயற்சி செய்து வருகிறது. அதே நேரத்தில் இழந்த ஆட்சியை மீண்டும் கைப்பற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி, காங்கிரசுடன் கை கோர்த்து, தேர்தலை சந்திக்கிறது.அதே நேரத்தில் பா.ஜ.க., மாநிலக்கட்சியான ஐ.பி.எப்.டி. கட்சியுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கிறது. மற்றொரு மாநிலக்கட்சியான திப்ரா மோதா கட்சி 42 தொகுதிகளில் வேட்பாளர்களை களம் இறக்கி இருக்கிறது. திரிணாமுல் காங்கிரசும் 28 இடங்களில் போட்டி போடுகிறது. இந்த தேர்தலில் ஆளும் கட்சியான பாஜக மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது.

259 வேட்பாளர்கள்

இங்கு 28 லட்சத்து 13 ஆயிரம் வாக்காளர்கள் உள்ளனர். இந்த தேர்தலில் 259 வேட்பாளர்கள் களம் காண்கின்றனர். அவர்களில் 20 பெண் வேட்பாளர்களும் அடங்குவர். அதிகபட்சமாக பா.ஜ.க. 12 பெண் வேட்பாளர்களை நிறுத்தி உள்ளது.

வாக்குச்சாவடிகள்

திரிபுரா மக்கள் வாக்கு அளிக்க 3,337 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. அவற்றில் 1,100 பதற்றமானவை என கண்டறியப்பட்டுள்ளளன. 28 மிகவும் பதற்றமானவை.பலத்த பாதுகாப்பு

இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. மாலை 4 மணிக்கு வாக்குப்பதிவு முடிகிறது. இங்கு தேர்தலுக்காக 25 ஆயிரம் மத்திய படையினருடன், 31 ஆயிரம் மாநில போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகிறார்கள். மாநிலம் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருப்பதுடன், முன் எச்சரிக்கை நடவடிக்கையாக நாளை காலை 6 மணி வரை தடை உத்தரவு போடப்பட்டுள்ளது.

ஆட்சியை பிடிப்பது யார்?

இன்று வாக்குப்பதிவு முடிந்தாலும், தேர்தல் முடிவுக்காக 2 வார காலம் காத்திருக்க வேண்டும். நாகாலாந்து, மேகாலயா மாநிலங்களுடன் சேர்த்துத்தான் வாக்கு எண்ணிக்கை அடுத்த மாதம் 2-ந்தேதி நடைபெறுகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.