திரிணாமுல் காங்கிரஸ் எம்பி கூட்டத்தொடர் முழுவதும் சஸ்பெண்ட் – மாநிலங்களைத் தலைவர் அறிவிப்பு

மழைக்கால கூட்டத்தொடர் முழுவதும் திரிணாமுல் காங்கிரஸ் எம்பி டெரிக் ஓ பிரையன் சஸ்பெண்ட்  செய்யப்பட்டதாக மாநிலங்களைத் தலைவர்  அறிவித்தார்.  நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த ஜூலை 20-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. மழைக்கால…

மழைக்கால கூட்டத்தொடர் முழுவதும் திரிணாமுல் காங்கிரஸ் எம்பி டெரிக் ஓ பிரையன் சஸ்பெண்ட்  செய்யப்பட்டதாக மாநிலங்களைத் தலைவர்  அறிவித்தார். 

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த ஜூலை 20-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கியது முதலே இரு அவைகளிலும் எதிர்க்கட்சிகள், மணிப்பூர் விவகாரம் குறித்து பிரதமர் நரேந்திர மோடி விளக்கம் அளிக்க தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர். இரு அவைகளிலும் எதிர்க்கட்சிகளின் கோஷத்துக்கு ஆளுங்கட்சியும் பதில் கோஷம் எழுப்பி வருகின்றன. இதனால், அவையில் பெரும் கூச்சல் குழப்பம் நிலவி வருகிறது.

இந்நிலையில் அவையில் கண்ணியத்துடன் நடந்து கொண்டால் மட்டுமே மீண்டும் அவைக்கு வருவேன் என்று மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா தெரிவித்திருந்தார். மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவை நேரில் சந்தித்த மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, மக்களவை காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் செளத்ரி, திமுக எம்பி கனிமொழி, தேசிய மாநாட்டுக் கட்சி தலைவர் ஃபரூக் அப்துல்லா உள்ளிட்டோர் சபாநாயகர் ஓம் பிர்லாவை அவைக்கு மீண்டும் வருமாறு கோரிக்கை வைத்தனர்.

இந்த கூட்டத்தொடரில் 32 மசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டு இருந்தது. ஆனால் மணிப்பூர் வன்முறை சம்பவம் குறித்து நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி விளக்கம் அளிக்க வலியுறுத்தி, எதிர்க்கட்சிகள் தொடர் அமளியில் ஈடுபட்டன. பிரதமர் மோடி பதிலளிக்காத நிலையில், பாஜக அரசுக்கு எதிராக, மக்களவையில் ஜூலை 26 ஆம் தேதி, காங்கிரஸ் கட்சி நம்பிக்கையில்லா தீர்மான நோட்டீஸ் வழங்கியது.

இத்தீர்மானத்திற்கு இந்தியா கூட்டணிக் கட்சிகள் ஆதரவு தெரிவித்தன. இந்த நிலையில், நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான விவாதம் இன்றும் நாளையும் நடைபெறுகிறது. நாடாளுமன்றத்திற்கு மீண்டும் திரும்பியுள்ள ராகுல்காந்தி , எதிர்க்கட்சிகள் சார்பில் உரை நிகழ்த்துவார் என அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் மாநிலங்களவையில் இன்று காலை கூட்டத்தொடர் தொடங்கியது.  இதில் மாநிலங்களவையில் திரிணாமுல் காங்கிரஸ் எம்பி டெரிக் ஓ பிரையன் கேள்வி எழுப்பினார். இதனையடுத்து அவை வரம்பை மீறி செயல்பட்டதாக மாநிலங்களவையில் இருந்து திரிணாமுல் காங். எம்பி டெரிக் ஓ பிரையன் கூட்டத்தொடர் முழுவதும் சஸ்பெண்ட் செய்யப்பட்டதாக மாநிலங்களவை தலைவர் ஜெகதீப் தன்கர் அறிவித்தார். மத்திய அமைச்சர் பியூஸ் கோயிலின் புகாரை தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.