கடந்த 2014ம் ஆண்டில் தொடங்கப்பட்ட திருச்சி அரிஸ்டோ மேம்பாலம் பணிகள் முடிவடைந்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு அமைச்சர் கே.என்.நேரு திறந்து வைத்தார்.
திருச்சி ரயில்வே சந்திப்பில் அகலம் குறைந்த ரயில்வே மேம்பாலத்திற்கு பதிலாக புதிய மேம்பாலம் அமைக்க திட்டமிடப்பட்டு கடந்த 2014ம் ஆண்டில் நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டன. இரு பிரிவுகளாக மேற்கொள்ளபட்ட அரிஸ்டோ மேம்பால பணிகள் முதற்கட்டமாக ரவுண்டானாவை மையமாக கொண்டு திண்டுக்கல் சாலை,மத்திய பேருந்து நிலையம், ரயில்வே சந்திப்பு ஆகியவற்றை இணைத்து
பாலம் கட்டப்பட்டு ஏற்கனவே பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது.
ஆனால் சென்னை – மதுரை நெடுஞ்சாலையை இணைக்கும் மன்னார்புரம் பகுதியில் ராணுவத்திற்கு சொந்தமான இடத்தில் நிலம் கையகப்படுத்துவதில் சிக்கல் ஏற்பட்டது. இந்நிலையில் பல்வேறு கட்ட பேச்சு வார்த்தைகளுக்கு பின்னர் ராணுவத்திற்கும், அரசுக்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டு ராணுவத்திற்கு சொந்தமான நிலத்தில் 8.45 கோடி திட்ட மதிப்பில் உள்கட்டமைப்பை ஏற்படுத்தி தர ஒப்புக்கொண்டதை அடுத்து ராணுவத்திடமிருந்து நிலம் கிடைத்தது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதையடுத்து மேம்பால கட்டுமான பணிகள் தீவிரமாக நடைபெற்று சமீபத்தில் பணிகள் நிறைவடைந்தன.இதனையடுத்து மேம்பாலத்தை பொதுமக்களின் பயன்பாட்டிற்காக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு மற்றும் திருச்சி மக்களை எம்.பி.திருநாவுக்கரசர் ஆகியோர் திறந்து வைத்தனர்.இதில் பல்வேறு அரசு அதிகாரிகள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
-வேந்தன்