மலையாளத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற ட்ரான்ஸ் திரைப்படம் தற்போது தமிழில் நிலை மறந்தவன் என்கிற பெயரில் வெளியாக உள்ளது.
பஹத் பாசில், நஸ்ரியா, கவுதம் மேனன் உள்ளிட்ட பலர் நடிப்பில் மலையாளத்தில் வெளியாகி மாபெரும் வெற்றிப்பெற்ற திரைப்படம் ட்ரான்ஸ். இந்த படம் தற்போது தமிழில் மொழி பெயர்ப்பு செய்யப்பட்டு நிலை மறந்தவன் என்ற பெயரில் ஜூலை 15 ஆம் தேதி வெளியாக உள்ளது. ராஜமாணிக்கம், உஸ்தாத் ஹோட்டல் ஆகிய சூப்பர்ஹிட் படங்களை இயக்கியவரும் பிரேமம் போன்ற சூப்பர்ஹிட் படங்களை தயாரித்தவருமான பிரபல மலையாள இயக்குனர் அன்வர் ரஷீத் இந்தப்படத்தை இயக்கியுள்ளார்.
மதத்தின் பெயரை சொல்லி பிழைப்பு நடத்துவதுடன் அப்பாவி மக்களின் தெய்வ நம்பிக்கையை தங்களுக்கு சாதகமாக்கி அவர்கள் உயிருடன் விளையாடுகிறது ஒரு போலி கும்பல். படித்து வேலை கிடைக்காத இளைஞன் ஒருவன் தன்னை அறியாமலேயே இந்த மோசடிக்கு துணை போகிறான். ஒருகட்டத்தில் உண்மை தெரிய வரும்போது அவன் என்ன முடிவெடுக்கிறான் என்பதை மையமாக வைத்து இந்தப்படத்தின் கதை உருவாகியுள்ளது.
ஜாக்ஸன் விஜயன், சுஷின் ஷியாம் இசையமைத்துள்ள இப்படத்திற்கு அமல் நீரத் ஒளிப்பதிவு செய்துள்ளார். பிரவீன் பிரபாகர் படத்தொகுப்பும், சர்வம் கிருஷ்ணார்ப்பணம் தமிழில் வசனம் எழுதியுள்ளார். தர்மா விஷுவல் கிரியேஷன்ஸ் சார்பில் ஜூலை 15-ல் தமிழில் வெளியாக உள்ள நிலை மறந்தவன் படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
– தினேஷ் உதய்









