பயணி ஒருவர் சிறுநீர் கழிக்க வந்தே பாரத் ரயிலில் ஏறியதால், ரூ.6,000 பணத்தை இழந்த சம்பவம் போபாலில் அரங்கேறியுள்ளது.
அப்துல் காதர் என்ற பயணி தனது குடும்பத்துடன் போபால் ராணி கமலாபாடி ரயில் நிலையத்தில் நின்று கொண்டிருந்தார். அப்போது அவருக்கு இயற்கை உபாதையை கழிக்க நெருக்கடியான சூழல் ஏற்பட்டது. அப்போது, ரயில் நிலையத்தில் நின்று கொண்டிருந்த வந்தே பாரத் ரயிலில் ஏறியுள்ளார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
சிறுநீர் கழித்துவிட்டு கழிவறையில் இருந்து வெளியே வந்த போது, அந்த ரயில் புறப்பட்டு விட்டதை அறிந்து அதிர்ச்சி அடைந்தார். இதனால் செய்வதறியாது திகைத்த அவர், ரயிலில் இருந்த 3 டிக்கெட் பரிசோதகர்களிடம் நடந்தவற்றை கூறியுள்ளார். மேலும், இது தொடர்பாக ரயிலில் ரோந்துப் பணியில் இருந்து காவலர்களிடமும் அவர் தெரிவித்துள்ளார். ஆனால், ரயிலை உடனடியாக நிறுத்த முடியாது என்றும், ரயில் நின்றால் மட்டுமே கதவு திறக்கும் என்றும் அவர் தெரிவித்தனர். இதனையடுத்து, வந்தே பாரத் ரயிலில் டிக்கெட் இன்றி அவர் பயணம் செய்து வந்தார்.
பின்னர், அந்த ரயில் அடுத்த ரயில் நிலையத்தில் நின்றவுடன் அப்துல் காதர் இறக்கி விடப்பட்டார். இருந்தாலும், டிக்கெட் இன்றி பயணம் செய்ததால், அவருக்கு ரூ.1020 அபாரதமும் விதிக்கப்பட்டது. அடுத்த ரயில் நிலையத்தில் இறங்கிய அவர், போபால் ரயில் நிலையத்தில் உள்ள குடும்பத்தினரை சந்திக்க ரூ.750 செலவு செய்து பேருந்தில் பயணித்து ராணி கமலாபாடி ரயில் நிலையத்திற்கு பயணித்துள்ளார்.
அங்கு சென்று பார்த்தபோது, அவரது குடும்பத்தினரோடு செல்ல முன்பதிவு செய்திருந்த ரயில் இந்த குளறுபடிகளுக்கு இடையே சென்று விட்டாதாக கூறினர். இந்த தவறவிட்ட ரயிலில் முன்பதிவிற்காக ரூ.4000 செலவிட்டது குறிப்பிடத்தக்கது.
இப்படியாக சிறுநீர் கழிக்க சென்ற பயணி ரூ6000 பணத்தை இழந்த சோகம் போபாலில் அரங்கேறியுள்ளது.