இலங்கை சிறையிலுள்ள மீனவர்களை விடுவிக்கக்கோரி ராமேஸ்வரத்தில் ரயில் மறியல்!

இலங்கை சிறையிலுள்ள தமிழக மீனவர்களை விடுவிக்கக்கோரி ராமேஸ்வரத்தில் மீனவர்கள் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம், பாம்பன், தங்கச்சிமடம், திருப்பாலைக்குடி
உள்ளிட்ட பகுதிகளில் இருந்து மீன்பிடி தடைக்காலம் முடிந்து மீன்பிடிக்கச்
சென்ற 55 நாட்களில் 61 மீனவர்கள் தொடர்ந்து இலங்கை கடற்படையினரால் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கைது செய்யப்பட்டு இலங்கையின் பல்வேறு சிறைசாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

மீனவர்களின் தொடர் கைது நடவடிக்கை கண்டித்து இலங்கை சிறையில் உள்ள அனைத்து மீனவர்களையும் உடனடியாக விடுதலை செய்ய வலியுறுத்தி ராமேஸ்வரம் மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் அறிவித்து தொடர் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் இன்று மாலை ராமேஸ்வரத்தில் இருந்து தாம்பரம் நோக்கி புறப்பட்ட
தாம்பரம் விரைவு ரயிலை தங்கச்சிமடத்தில் மறித்து ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்திருந்தனர். அதன்படி  இன்று மதியம் நான்கு மணி அளவில்  மீனவ சங்க பிரதிநிதிகள், மீனவர்கள் மற்றும் சிறையில் உள்ள மீனவர்களின் குடும்பத்தினர் உள்ளிட்ட 600க்கும் மேற்பட்டோர் தங்கச்சிமடம்  ரயில்வே தண்டவாளங்களில் அமர்ந்து ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மீனவர்களின் இந்த ரயில் மறியல் போராட்டம் காரணமாக ராமேஸ்வரம் ரயில்
நிலையத்திலிருந்து  புறப்பட வேண்டிய தாம்பரம் விரைவு ரயில் மீனவர்கள் போராட்டம் நடத்திய இடத்தில் அரை மணி நேரம் நின்றது.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சந்தீஷ்
மீனவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். இருப்பினும் மீனவர்கள் இலங்கை
தங்கள் கோரிக்கையை முன்வைத்து தொடர்ந்து மத்திய மாநில அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பி வந்தனர்.

பின்னர் தொடர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் மீனவர்கள் இந்த  ரயில் மறியலால் மத்திய அரசுக்கு மீனவர்களின் போராட்டம் சென்றடைந்திருக்கும் என நம்புவதாக தெரிவித்து   தண்டவாளத்தை விட்டு கலைந்து சென்றனர். இதையடுத்து  அரை மணி நேரமாக காத்திருப்புக்கு பின் தாம்பரம் விரைவு ரயில் சென்றது.

இதனிடையே பாம்பன் நாட்டுப்படகு மீனவர்கள் ஒன்பது பேருக்கு தலா ஒருவருக்கு 3.50 கோடி (இலங்கை பணம்) இந்திய மதிப்பிற்கு ஒரு கோடி என அபராதத்துடன் புத்தளம் நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.