அணுக்கழிவுகளை கூடங்குளம் அணுமின் நிலையத்திலேயே சேமித்து வைக்கும் உத்தரவை மத்திய அரசு திரும்பப்பெற வேண்டும் என பிரதமர் மோடிக்கு நாடாளு மன்ற திமுக உறுப்பினர் டி.ஆர்.பாலு கடிதம் எழுதியுள்ளார்.
இது தொடர்பாக அவர் எழுதிய கடிதத்தில், கூடங்குளம் அணுமின் நிலையத்தில் சேமிக்கப் படும் அணுக்கழிவுகளை அங்கேயே சேமித்து வைக்க இந்திய அணுசக்தி கழகம் கடந்த ஜூலை 7ஆம் தேதி அனுமதி அளித்துள்ளது வேதனை அளிக்கிறது என கூறியுள்ளார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்திய அணுசக்தி கழகம் அளித்த இந்த அனுமதி, உச்சநீதிமன்ற உத்தரவை மீறுவதாக உள்ளதாகவும், கூடங்குளம் அணுமின் நிலையம் தொடங்கும்போது, அணுக்கழிவுகள் ரஷ்யா அனுப்பப்படும் என்று எடுக்கப்பட்ட முடிவை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.
எனவே, கூடங்குளம் அணுமின் நிலையத்தில் உள்ள 1,2,3,4 ஆகிய அணு உலைகளில் சேமித்து வைத்துள்ள கழிவுகளை ரஷ்யாவுக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதமரிடம் அவர் அறிவுறுத்தியுள்ளார்.
மேலும், அணுசக்தி கழகத்தின் உத்தரவை திரும்பப்பெறுவதுடன், கல்பாக்கத்தில் உள்ள அணுக்கழிவுகளை பாதுகாப்பான முறையில் அகற்ற நடவடிக்கை வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார். சென்னை, புதுச்சேரி மற்றும் தென் தமிழகத்தில் அதிக மக்கள் வசிப் பதால், அணுக்கழிவுகளை முன்னுரிமை அளித்து அகற்ற பிரதமர் மோடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என திமுக எம்பி டி.ஆர்.பாலு வலியுறுத்தியுள்ளார்.