‘அஜயந்தே ரண்டம் மோஷனம்’ திரைப்படம் 3 டி தொழில்நுட்பத்திலும் வெளியாக உள்ளது என்ற புதிய தகவல் வெளியாகியுள்ளது.
மலையாள சினிமாவின் முன்னணி நடிகரான டோவினோ தாமஸ், மின்னல் முரளி உள்ளிட்ட திரைப்படத்தில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். விதவிதமான கதாபாத்திரத்தை தேர்வு செய்து நடிக்கும் டோவினோ தாமஸூக்கு மலையாள ரசிகர்கள் மட்டுமில்லாமல், தமிழ் மற்றும் பிற மொழிகளிலும் ரசிகர்கள் இருக்கிறார்கள்.
தற்போது இவர், ‘அஜயந்தே ரண்டம் மோஷனம்’ (ஏஆர்எம்) படத்தில் 3 விதமான கெட்டப்பில் நடித்து வருகிறார். இப்படத்திற்கு கடந்த அக்டோபர் மாதம் பூஜை போடப்பட்டு படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து முடிந்தது. இந்த படத்தை சுஜீத் நம்பியார் எழுத்தில் அறிமுக இயக்குநர் ஜித்தின் லால் இயக்கி உள்ளார்.

இப்படத்தில் நாயகியாக கீர்த்தி ஷெட்டி நடிக்கிறார். இந்தப் படத்தின் மூலம் மலையாள திரையுலகில் அறிமுகமாகிறார் கீர்த்தி ஷெட்டி. மேலும், பாசில் ஜோசப், ஐஸ்வர்யா ராஜேஷ், சுரபி லட்சுமி, ரோகினி, ஹரிஷ் உத்தமன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். படத்திற்கு திபு நினன் தாமஸ் இசையமைக்கிறார்.
இத்திரைப்படம் 1900, 1950, 1990 ஆகிய மூன்று காலக்கட்டத்தை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இத்திரைப்படம் மலையாளம் தவிர தமிழ், இந்தி, கன்னடம் மற்றும் தெலுங்கு உள்ளிட்ட பிற மொழிகளிலும் பான் இந்தியத் திரைப்படமாக வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.
இப்படம் ஓணம் பண்டிகையை முன்னிட்டு செப்டம்பர் 12 ஆம் தேதி வெளியாகவுள்ளது. ரிலீஸ் தேதி நெருங்கிய நிலையில் படத்தின் ப்ரோமோஷன் பணிகள் தீவிரமாக நடைப்பெற்று வருகிறது. சமீபத்தில இப்படத்தின் டிரெய்லர் வெளியாகி கவனம் பெற்றது. இந்த நிலையில், இத்திரைப்படம் 3 டி தொழில்நுட்பத்திலும் வெளியாக உள்ளது என்ற புதிய தகவல் வெளியாகியுள்ளது.







