தக்காளி விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால், வயலில் தக்காளி திருட்டை தடுக்க இரும்பு முள்வேலி அமைத்து, விவசாயிகள் பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளனர்.
தக்காளி உற்பத்தி குறைவால் தொடர்ந்து விலை அதிகரித்து வருகிறது. கடந்த ஒரு மாத காலமாக 100 ரூபாய் முதல் 150 ரூபாய் வரை தற்போது விற்பனை ஆகி வரும் தக்காளி இன்று மேலும் அதிகரித்து 180 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அந்த வகையில், தக்காளி விலை ஒரு கிலோ 150 முதல் 180 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுவதால், ஓசூர், தேன்கனிக்கோட்டை, சூளகிரி ,பேரிகை தக்காளி பயிரிட்ட விவசாயிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்நிலையில் சிலர் வயலில் உள்ள தக்காளியை இரவில் திருடி செல்வதால், விவசாயிகள் சிலர் இரவு பகல் பாராது தொடர்ந்து தோட்டத்தை கண்காணித்து வருகின்றனர். ஒரு சிலர் முள்வேலி அமைத்து பாதுகாத்து வருகின்றனர்.
அதன்படி ஒசூர் அருகே தாசிரப்பள்ளி பகுதியைச் சேர்ந்த விவசாயி ராம ரெட்டி என்பவர் சுமார் இரண்டு ஏக்கர் நிலத்தில் தக்காளி சாகுபடி செய்துள்ளார். தோட்டத்திற்கு முன்பெல்லாம் எவ்வித பாதுகாப்பும் இன்றி இருந்து வந்தது. ஆனால் தற்போது தக்காளி திருட்டு அதிகமாக நடைபெறுவதால், கடந்த சில நாட்களில் தக்காளியில் வந்த லாபத்தை வைத்து சுமார் ஒன்றரை லட்சம் ரூபாய் செலவில் தனது தோட்டத்தைச் சுற்றிலும் கருங்கல் தூன் இரும்பு முள்வேலி அமைத்து தோட்டத்தை பாதுகாத்துள்ளார்.
இது குறித்து விவசாயிகள் தெரிவிக்கையில், இரண்டு ஏக்கர் தக்காளி சாகுபடி செய்துள்ளோம். கடந்த ஒரு மாத காலமாக தக்காளி விலை ஏற்றத்தில் மூன்று முறை அறுவடை செய்து சுமார் 9 லட்சம் வரை வருமானம் கிடைத்துள்ளது. வந்த லாபத்தில் தோட்டத்தைச் சுற்றிலும் கருங்கற்கள் தூண் இரும்பு கம்பி முள்வேலி அமைத்து இரவு பகல் 5 பேர் காவல் காக்கிறோம். மேலும் 100 நாள் வேலைக்கு ஆட்கள் செல்வதால் வேலைக்கு ஆட்கள் கிடைக்காமல் தக்காளி சாகுபடி சில விவசாயிகள் நிறுத்தி உள்ளனர். இதனால் தக்காளி வரத்து குறைந்து உள்ளதால் தான் விலை அதிகரிக்க காரணம் என தெரிவிக்கின்றனர்.
- பி.ஜேம்ஸ் லிசா