எதிர்க்கட்சிகளின் கூட்டத்தை திசை திருப்பவே அமைச்சர் பொன்முடி வீட்டில் சோதனை – ஆர்.எஸ் பாரதி குற்றச்சாட்டு!

பெங்களூருவில் நடைபெறும் எதிர்க்கட்சிகளின் கூட்டத்தை திசை திருப்புவதற்காகவே அமைச்சர் பொன்முடி வீட்டில் சோதனை நடத்துவதாக திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ் பாரதி குற்றம்சாட்டியுள்ளார்.  அமலாக்கத்துறை சோதனை நடந்து வரும் சென்னை சைதாப்பேட்டையில் உள்ள திமுக…

பெங்களூருவில் நடைபெறும் எதிர்க்கட்சிகளின் கூட்டத்தை திசை திருப்புவதற்காகவே அமைச்சர் பொன்முடி வீட்டில் சோதனை நடத்துவதாக திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ் பாரதி குற்றம்சாட்டியுள்ளார். 

அமலாக்கத்துறை சோதனை நடந்து வரும் சென்னை சைதாப்பேட்டையில் உள்ள திமுக அமைச்சர் பொன்முடியின் இல்லத்திற்கு திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ் பாரதி வந்தார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த ஆர்.எஸ் பாரதி தெரிவித்ததாவது:

மார்ச் 1ஆம் தேதி நடைபெற்ற தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் பிறந்தநாள் விழாவில் ”மத்தியில் யார் பிரதமராக வேண்டும் என்பது முக்கியமல்ல, யார் பிரதமராக ஆகக் கூடாது என்பதை முடிவு செய்ய வேண்டும்” என்பது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் பேசியிருந்தார். அதிலிருந்து தொடர்ச்சியாக மத்திய அரசு தமிழ்நாடு அரசுக்கு இன்னல்களை கொடுத்து வருகிறது.


அதன் தொடர்ச்சியாக தான் செந்தில் பாலாஜி இல்லத்தில் அமலாக்க துறையினர் சோதனை மேற்கொண்டனர். அது தொடர்பான வழக்கும் உயர்நீதிமன்றத்தில்
நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இன்றும், நாளையும் எதிர்க்கட்சிகளின்
கூட்டமானது பெங்களூருவில் நடைபெறும் சூழ்நிலையில் தற்பொழுது உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி மற்றும் மக்களவை உறுப்பினரான அவரது மகன் கௌதம சிகாமணியுடைய இல்லங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகிறார்கள். இந்த சோதனை தமிழ்நாட்டு மக்களை திசைதிருப்புவதற்காகவே நடைபெற்று வருகிறது.

தான் ஒரு வழக்கறிஞர், இருப்பினும் என்னிடமே இந்த சோதனை எதன் அடிப்படையில்
நடைபெறுகிறது என்று தெரிவிக்கவில்லை. ஜெயலலிதா ஆட்சியில் இருந்தபோது இந்த வழக்கு தொடரப்பட்டது, அப்படி பார்க்கும்பட்சத்தில் கிட்டத்தட்ட 10 ஆண்டுக்கு மேல் ஆகிறது. அமலாக்கத் துறையினருக்கு இது போன்ற அதிகாரம் இருக்கின்றதா என உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்புள்ளது. இதுவரை அமலாக்கத்துறை போடப்பட்ட வழக்கில் நூற்றுக்கு இரண்டு சதவீதம் கூட நிரூபிக்கப்படவில்லை.

இதே போன்று கர்நாடகத்தில் டி.கே.சிவகுமார் இல்லத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள்
தொடர் சோதனை மேற்கொண்டார்கள். அதன் பின்பு அதிகப்படியான வாக்கு வித்தியாசத்தில் அவர் வெற்றி பெற்றார். கர்நாடக மாநிலத்தில் நடந்து முடிந்த தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி எப்படி படுதோல்வி அடைந்ததோ அதேபோன்று வரும்  நாடாளுமன்ற தேர்தலில் பாஜக காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை படுதோல்வி அடையும் என்பதில் ஐயமில்லை.

இவ்வாறு ஆர்.எஸ்.பாரதி தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.