தமிழ்நாடு சிறுபான்மையினர் ஆணையத்தின் தலைவராக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பீட்டர் அல்போன்ஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில், “தமிழ்நாட்டில் வாழும் மதம் மற்றும் மொழிவாரியான சிறுபான்மையினரின் நலன்களைப் பேணிக் காத்திடவும், அவர்களின் உரிமைகளைப் பாதுகாக்கவும் , கடந்த 1989 ஆம் ஆண்டு டிசம்பர் திங்கள் 13 ஆம் நாள் அன்று அப்போதைய முதலமைச்சர் கருணாநிதியால் தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையம் அமைக்கப்பட்டது ”என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையம், சிறுபான்மையினரின் கல்வி, சமூக மற்றும் பொருளாதார மேம்பாட்டிற்காக செயல்பட்டு வருவதாகவும், இந்த ஆணையத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திருத்தியமைத்து , அதன் தலைவராக எஸ் . பீட்டர் அல்போன்ஸை நியமித்து உத்தரவிட்டுள்ளார்கள் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
பீட்டர் அல்போன்ஸ் கடந்த 1989 மற்றும் 1991 ல் நடந்த சட்டமன்றத் தேர்தல்களில் தென்காசி சட்டமன்றத் தொகுதியிலிருந்தும், 2006 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் கடையநல்லூர் சட்டமன்றத் தொகுதியிலிருந்தும் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர். காங்கிரஸ் மூத்த தலைவரான பீட்டர் அல்போன்ஸ், சட்டமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவராக பணியாற்றி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.







