திருப்பதி வருடாந்திர பிரம்மோற்சவம் நிறைவு; புனித நீராடிய பக்தர்கள்….

திருமலை ஏழுமலையான் கோயில் வருடாந்திர பிரம்மோற்சவம் நேற்று தீர்த்தவாரியுடன் நிறைவு பெற்றது. கடந்த திங்கள்கிழமை வருடாந்திர பிரம்மோற்சவம் விமரிசையாக தொடங்கிய நிலையில், நாள்தோறும் பல்வேறு வாகனங்களில் மலையப்ப சுவாமி திருவீதி உலா வந்தார். இதற்கிடையே…

திருமலை ஏழுமலையான் கோயில் வருடாந்திர பிரம்மோற்சவம் நேற்று தீர்த்தவாரியுடன் நிறைவு பெற்றது.

கடந்த திங்கள்கிழமை வருடாந்திர பிரம்மோற்சவம் விமரிசையாக தொடங்கிய நிலையில், நாள்தோறும் பல்வேறு வாகனங்களில் மலையப்ப சுவாமி திருவீதி உலா வந்தார்.

இதற்கிடையே 9-ஆம் நாளான செவ்வாய்க்கிழமை காலை தீர்த்தவாரியுடன் நிறைவு பெற்றது. தீர்த்தவாரியின் போது மலையப்ப சுவாமி ஸ்ரீதேவி பூதேவி மற்றும் சக்கரத்தாழ்வாருக்கு திருக்குளக்கரையில் ஸ்நபன திருமஞ்சனம் நடைபெற்றது.

ஸ்ரீதேவி பூதேவி சமேத மலையப்ப சுவாமி மற்றும் சக்கரத்தாழ்வாரை திருக்குளக்கரையில் உள்ள வராகஸ்வாமி கோயில் மண்டபத்தில் எழுந்தருளச் செய்து அவர்களுக்கு பால், தயிர், தேன். இளநீர், மஞ்சள், சந்தனம், சிவப்பு சந்தனம் மற்றும் மூலிகை கலந்த வெந்நீரால் திருமஞ்சனம் நடத்தப்பட்டது. அபிஷேக பொருட்களை ஜீயர்கள் தங்கள் கைகளால் எடுத்துத்தர அர்ச்சகர்கள் உற்சவமூர்த்திகளுக்கு திருமஞ்சனம் செய்வித்தனர். ஒவ்வொரு அபிஷேகத்தின் போதும் பல்வேறு உலர் பழங்கள் மற்றும் வெளிநாட்டு மலர்களால் தயாரிக்கப்பட்ட மாலைகள் மற்றும் கீரிடங்கள் உள்ளிட்டவை உற்சவமூர்த்திகளுக்கு அணிவிக்கப்பட்டது.

பின்னர் சக்கரத்தாழ்வாருக்கு திருக்குளத்தில் அர்ச்சகர்கள் தீர்த்தவாரி நடத்தினர். அப்போது லட்சகணக்கான பக்தர்கள் திருக்குளத்தில் புனித நீராடினர். இதில் தேவஸ்தான அதிகாரிகள் அனைவரும் கலந்து கொண்டனர்.

திருமலையில் கடந்த நாள்களாக விமரிசையாக நடைபெற்ற வருடாந்திர பிரம்மோற்சவம்
9 முடிவடைந்ததை முன்னிட்டு மாலை உற்சவமூர்த்திகள் தங்கப் பல்லக்கில் மாடவீதியில் வலம் வந்தனர். பின்னர் கோயிலுக்குள் அழைத்து செல்லப்பட்ட அவர்கள் முன்னிலையில் பிரம்மோற்சவம் தொடங்கும் போது முப்பத்து முக்கோடி தேவர்களை அழைக்கும் விதம் கொடிமரத்தில் ஏற்றப்பட்ட கருடக்கொடி இறக்கப்பட்டது.

பிரம்மோற்சவத்தின் 8-ஆம் நாளான திங்கள்கிழமை 72,137 பக்தர்கள் தரிசித்தனர்; உண்டியல் காணிக்கை மூலம் ரூ.3.37 கோடி வருவாய் கிடைத்துள்ளது. 23,735 பேர் முடிகாணிக்கை செலுத்தினர். 3.25 லட்சம் லட்டுகள் விற்பனை செய்யப்பட்டன. மருத்துவ முகாம்களில் 4,987 பேர் சிகிச்சை பெற்றனர்; 2,500 ஸ்ரீவாரி சேவார்த்திகள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டனர். திருமலை-திருப்பதி இடையே அரசு பஸ்களில் 67,000 பேர் பயணம் செய்தனர் என தேவஸ்தானம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.