தைப்பூசத்தை முன்னிட்டு திருப்பரங்குன்றம் கோயிலில் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம்!

திருப்பரங்குன்றத்தில் தைப்பூசத்தை முன்னிட்டு அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

தமிழ் கடவுள் முருகனின் ஆறுபடை வீடுகளில் முதல் படை வீடான திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் முருகனின் முக்கிய திருவிழாக்களில் ஒன்றான தைப்பூச திருவிழா இன்று (பிப். 11) நடைபெற்று வருகிறது.

தைப்பூசத்தை முன்னிட்டு அலகு குத்தி பாதயாத்திரையாக முருகனை தரிசனம் செய்ய பக்தர்கள் வருகை தந்து கொண்டிருக்கின்றனர். மூன்று ரத வீதிகளில் பக்தர்கள் வரிசையாக காத்திருந்து, சுவாமி தரிசனம் மேற்கொண்டு வருகின்றனர். மதுரை மட்டுமல்லாது பிற மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக கட்டண தரிசனத்தில் வருபவர்கள் கோயிலுக்கு இடப்புறமாகவும், இலவச தரிசனத்தில் செல்பவர்கள் கோயிலுக்கு வலது புறமாகவும், கிரிவலப் பாதை நெடுக பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர். மேலும் எந்தவித அசம்பாவிதங்களும் ஏற்படாமல் இருப்பதற் நூற்றுக்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகள் மூலம் காவல்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். கூடுதல் பாதுகாப்பிற்காக 150-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் தற்போது திருப்பரங்குன்றத்தில் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.