முறப்பநாடு தாமிரபரணி ஆற்று பால வேலைபாடு கழிவுகள் ஆற்றங்கரையில் கொட்டப்பட்டதையடுத்து , தகவலின் பேரில் வந்த தமிழ்நாடு மாசு கட்டுபாட்டு வாரியம் அதனை அகற்ற உத்தரவிட்டனர்.
திருநெல்வேலியில் இருந்து தூத்துக்குடி செல்லும் நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது முறப்பநாடு. இவ்வூரின் வழியாக வற்றாத ஜீவ நதியான தாமிரபரணி பாய்ந்தோடுகிறது. இதற்கிடையே இங்குள்ள தாமிரபரணி ஆற்றின் மீது அமைக்கப்பட்ட பாலம் பல முறை சேதமடைந்ததால் இதனை சீரமைக்கும் பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் இப்பாலத்தை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள் வேலையின் போது பயன்படுத்திய ரப்பர் கையுறைகள் மற்றும் பிளாஸ்டிக் கழிவுகள்
உள்ளிட்டவற்றை ஆற்றங்கரையிலேயே கொட்டியுள்ளனர். இதனால் ஆற்றங்கரையோரம் கழிவுகளால் நிறைந்து காணப்படுவதுடன்,சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.
எனவே இக்கழிவுகளை அப்புறப்படுத்தக்கோரி அப்பகுதியை சேர்ந்த பசுமை தமிழ் தலைமுறை அறக்கட்டளையின் தலைவர் சுதன் தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம் உள்ளிட்டவற்றுக்கு மனு அளித்தார்.
இதனை தொடர்ந்து தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் தாமிரபரணி நதிக்கரையோரம் கொட்டப்பட்ட கழிவுகளை அகற்ற வேண்டும் என தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திற்கு உத்தரவிட்டது.உத்தரவின் அடிப்படையில் ஜேசிபி இயந்திரங்கள் மூலமாக ஆற்றங்கரையில் கொட்டப்பட்டிருந்த கழிவுகள் இன்று அகற்றப்பட்டன.
-வேந்தன்







