கிரீஸில் கார் ஒன்று இரவு நேர கேளிக்கை விடுதியாக மாற்றப்பட்டிருப்பது பயணிகளிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
கொரோனா காரணமாக மக்கள் பலர் வீட்டிற்குள்ளேயே முடங்கி இருக்கின்றனர். இதனால் மக்களுக்கு மன ரீதியிலான பிரச்சனைகளும் ஏற்படுகின்றன. தற்போது விடுதிகள், தியேட்டர்கள் மீண்டும் திறக்கப்பட்டாலும் பல்வேறு கட்டுப்பாடுகளை பின்பற்ற வேண்டியது அவசியமாகிறது. இந்நிலையில் கிரீஸ் நாட்டின் தெசலோனிகி நகரை சேர்ந்த டாக்ஸி டிரைவர் ஒருவர் வித்தியாசமான முயற்சி மேற்கொள்கிறார்.
இரவு நேரங்களில் தனது காரை எடுத்துக் கொண்டு புறப்படுகிறார். காருக்குள் கலர் கலரான லைட், சூப்பர் மியூசிக் என மற்றவர்களை ஈர்க்கும் வகையில் இருக்கிறது. இந்த காரில் ஏறும் பயணிகளுக்கு ஒரு இரவு நேர பார்ட்டி சென்று வந்த அனுபவம் இருக்கும்.
தெசலோனிகி நகரில் கேளிக்கை விடுதிகள் உள்ளிட்ட அனைத்தும் மூடப்பட்டுள்ளது. இதனால் மக்களின் மனசோர்வை போக்கி அவர்களை உற்சாகப்படும் நோக்கில் இந்த முயற்சியை மேற்கொண்டதாக அவர் தெரிவித்துள்ளார். இதில் பயணம் செய்யும் பயணிகள் இசையை ரசிப்பதுடன், மிகவும் மகிழ்ச்சியடைவதாக தெரிவிக்கின்றனர். தற்போது இந்த கார் பயணிகளிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.







