” பிரக்ஞானந்தா வெற்றியின் ரகசியம் இதுதான் “ – தாய் நாகலட்சுமி பேட்டி

செஸ் கிராண்ட் மாஸ்டரான பிரக்ஞானந்தாவின் வெற்றியின் ரகசியம் குறித்து அவரது தாய் நாகலட்சுமி பேட்டி அளித்துள்ளார். அஜா்பைஜானில் நடைபெற்ற உலகக் கோப்பை செஸ் போட்டியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த பிரக்ஞானந்தா இரண்டாம் இடம் பிடித்து வெள்ளிப்பதக்கம்…

செஸ் கிராண்ட் மாஸ்டரான பிரக்ஞானந்தாவின் வெற்றியின் ரகசியம் குறித்து அவரது தாய் நாகலட்சுமி பேட்டி அளித்துள்ளார்.

அஜா்பைஜானில் நடைபெற்ற உலகக் கோப்பை செஸ் போட்டியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த பிரக்ஞானந்தா இரண்டாம் இடம் பிடித்து வெள்ளிப்பதக்கம் வென்றார். இதனையடுத்து இன்று சென்னை திரும்பிய பிரக்ஞானந்தாவுக்கு விமான நிலையத்தில் தமிழ்நாடு அரசு சார்பில் மேளதாளம் முழங்க உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

அவர் பயின்ற வேலம்மாள் மெட்ரிக் பள்ளி மாணவர்கள், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய வீரர்களும் பிரக்ஞானந்தாவுக்கு உற்சாக குரல் எழுப்பி வரவேற்பு அளித்தனர். இதனைத் தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை அவரது இல்லத்தில் பிரக்ஞானந்தா சந்தித்தார். அப்போது தாம் வென்ற வெள்ளிப் பதக்கத்தை முதல்வரின் கையில் கொடுத்து அதனை பிரக்ஞானந்தா பெற்றுக் கொண்டார்.

அப்போது தமிழ்நாடு அரசு சார்பில் 30 லட்சம் ரூபாய்க்கான காசோலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பிரக்ஞானந்தாவிடம் வழங்கினார். இந்த சந்திப்பின் போது அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், மற்றும் பிரக்ஞானந்தாவின் பெற்றோர் உடன் இருந்தனர்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய பிரக்ஞானந்தாவின் தாய் நாகலட்சுமி தெரிவித்ததாவது..

” பிரக்ஞானந்தா தனது 7 ஆவது சுற்றின் போது வெற்றி பெற்றால் தான் கேண்டிடேட் தொடருக்கு தகுதிபெற முடியும் என்ற நிலையில், தனது பிரார்த்தனைக்கு பிறகு அவர் வெற்றி பெற்றதும் தாங்க முடியாமல் கண்ணீர் விட்டு அழுததாகவும், அப்போது தங்களை அறியாமல் எடுக்கப்பட்ட புகைப்படமே வைரல் ஆனதாகவும் அவரது தாய் நாகலட்சுமி தெரிவித்துள்ளார்.

கேண்டிடேட் தொடருக்கு அவர் தகுதி பெற்றது ஒரு அம்மாவா எனக்கு மகிழ்ச்சி, 20 முதல் 25 நாட்களாக அவருடன் நான் இருந்து பார்த்தேன். அதனால் எனக்கு மகிழ்ச்சி. நான் மட்டுமல்ல, எங்களது உறவினர்களும் அவருக்கு ஒத்துழைப்பு கொடுக்கிறார்கள். அதுதான் அவர் வெற்றிக்கு காரணம்.

சிறு வயதில் இருந்தே குளித்தவுடன் விபூதி வைத்து விடுவார். சில நேரங்களில் அவரது வெற்றிக்கு விபூதியும் ஒரு காரணமாக மாறிவிடுகிறது.” என நாகலட்சுமி தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.