அல் கயிதா தலைவர் அல் ஜவாஹிரி கொல்லப்பட்டதற்கு அவருக்கு இருந்த ஒரு பழக்கமே காரணம் என்பது தற்போது தெரிய வந்துள்ளது.
அமெரிக்கா நடத்திய ஆளில்லா விமான தாக்குதலில் ஆப்கனிஸ்தானின் காபூலில் பதுங்கி இருந்த அல் கயிதா தலைவர் அல் ஜவாஹிரி கடந்த சனிக்கிழமை கொல்லப்பட்டார். இதனை ஞாயிற்றுக்கிழமை இரவு அதிபர் ஜோ பைடன் உறுதிப்படுத்தினார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்நிலையில், அல் ஜவாஹிரிக்கு இருந்த ஒரு பழக்கமே அவர் இருக்கும் இடத்தை அமெரிக்க உளவு அமைப்பான சிஐஏ-வுக்கு காட்டி கொடுத்துள்ளது.
அல் ஜவாஹிரிக்கு தினமும் அதிகாலையில் தனது வீட்டின் பால்கனியில் அமர்ந்தவாறு நாளிதழ்களைப் படிக்கும் வழக்கம் இருந்ததாகக் கூறப்படுகிறது.
அவர் பால்கனியைத் தவிர வேறு எங்கும் அமர்ந்து படிக்க விரும்ப மாட்டாராம்.
அவரது இந்த பழக்கத்தை அமெரிக்க உளவு அமைப்பான சிஐஏ கண்டறிந்துள்ளது.
இதனையடுத்து, செயற்கைக்கோள் மூலம் காபூலில் பால்கனியுடன் உள்ள வீடுகளை சிஐஏ கண்காணிப்பு வலையத்துக்குள் கொண்டு வந்துள்ளது.
அப்போது, ஒரு குறிப்பிட்ட வீட்டின் பால்கனியில் ஒருவர் நாள்தோறும் அதிகாலையில் அமர்ந்து நாளிதழ்களை வாசிப்பதை அது கண்டறிந்துள்ளது.
அவரது முக அமைப்பு, வயது, உடை, தொப்பி, நடந்து செல்லும் விதம் என பலவற்றையும் சிஐஏ ஆய்வு செய்து வந்துள்ளது.
இதையடுத்தே, தனது நவீன தொழில்நுட்ங்கள் நிறைந்த ஆளில்லா விமானத்தைப் பயன்படுத்தி கடந்த சனிக்கிழமை அமெரிக்கா தாக்குதல் நடத்தி உள்ளது.
அல் ஜவாஹிரி இறந்ததை ஆப்கனிஸ்தானை ஆட்சி செய்யும் தாலிபான்கள் உறுதிப்படுத்தாத நிலையில், தனது செயற்கைக்கோள் புகைப்பட ஆதாரங்களைக் கொண்டே அமெரிக்கா உறுதிப்படுத்தி உள்ளது.
அல் ஜவாஹிரி சனிக்கிழமை கொல்லப்பட்டதை இந்திய உளவு அமைப்புகள் உடனடியாக கண்டுபிடித்துள்ளன. எனினும், அமெரிக்கா இதனை உறுதிப்படுத்தட்டும் என காத்திருந்ததாகக் கூறப்படுகிறது.
சர்வதேச அளவில் தேடப்படும் குற்றவாளியான அல் ஜவாஹிரி, 10 ஆண்டுகளுக்கும் மேலாக அமெரிக்காவுக்கு தண்ணி காட்டி வந்தார்.
இந்நிலையல், தனக்கு இருந்த ஒரு குறிப்பிட்ட பழக்கத்தின் காரணமாகவே அவர் அமெரிக்காவிடம் சிக்கி உள்ளார்.
அல் ஜவாஹிரி கொல்லப்பட்டது குறித்துப் பேசிய அமெரிக்க அதிபர் ஜோ பைடன், அமெரிக்க மக்களுக்கு அச்சுறுத்தலாக இருப்பவர்கள் எங்கே பதுங்கி இருந்தாலும், எவ்வளவு காலம் ஆனாலும் அவர்கள் கொல்லப்படுவார்கள் என்று தெரிவித்தார்.