வங்கி ஊழியர்களின் வேலை நிறுத்தப் போராட்டத்திற்கு விசிக தலைவர் திருமாவளவன் ஆதரவு தெரிவித்துள்ளார்.
வங்கிகளை தனியார் மயமாக்கும் முயற்சியை கைவிட வேண்டும் என நாடு முழுவதும் டிசம்பர் 16,17 தேதிகளில் ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தனியார்மய மசோதாவை திரும்பப் பெற வேண்டும் என்றும் அரசு வங்கிகளை வலுப்படுத்த வேண்டும் என்றும் மூன்று முக்கிய கோரிக்கைகளை ஊழியர்கள் முன்வைத்துள்ளனர்.
வங்கிகள் கம்பெனி சட்டம் 1970, 1980 மற்றும் வங்கிகள் ஒழுங்குமுறைச் சட்டம் 1949 ஆகியவற்றில் திருத்தங்கள் கொண்டுவரப்படும் என்று சமீபத்தில் மத்திய அரசு அறிவித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. முதல் இரண்டு சட்டங்கள் மூலம்தான் 14 பெரிய தனியார் வங்கிகளும், 6 சிறிய தனியார் வங்கிகளும் இந்திரா காந்தி தலைமையிலான அன்றைய காங்கிரஸ் அரசுகளால் தேசியமயமாக்கப்பட்டன.
அவற்றின் 100% பங்குகள் தனியார் கைகளிலிருந்து மத்திய அரசின் வசம் மாற்றப்பட்டன. இதனையடுத்து 1994-ல் நரசிம்ம ராவ் தலைமையிலான காங்கிரஸ் அரசால் வங்கி ஊழியர்களின், பொது மக்களின் பரவலான எதிர்ப்பையும் மீறி கொண்டுவரப்பட்ட சட்டத்திருத்தம் மூலமாக பொதுத்துறை வங்கிகளில் மத்திய அரசின் பங்குகள் 100% என்பதிலிருந்து 51% ஆகக் குறைக்கப்பட்டது.
இந்நிலையில் இதனைத் தொடர்ந்து தற்போது நாடாளுமன்றத்தில் வங்கிகள் தனியார்மய மசோதா முன்மொழியப்பட உள்ளது. இந்த மசோதா தற்போது உள்ள 51% பங்குகளையும் தனியார்மயமாக்குவதற்கு வழிவகை செய்யும் என ஊழியர்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
https://twitter.com/thirumaofficial/status/1471326791092486146
எனவே இதனை எதிர்த்து நடைபெறும் இரண்டு நாட்கள் நடைபெறும் தொடர் வேலை நிறுத்தப் போராட்டத்திற்கு விசிக தலைவர் திருமாவளவன் ஆதரவு தெரிவித்துள்ளார்.
இது குறித்து தனது டிவிட்டர் பதிவில், “நாடெங்கும் பொதுத்துறை வங்கி ஊழியர்கள் 9 லட்சம் பேர் திச-16 & 17 ஆகிய இரு நாட்கள் மேற்கொண்டிருக்கும் ஞாயமான வேலை நிறுத்தப் போராட்டத்தை விசிக சார்பில் ஆதரிக்கிறோம். பொதுத்துறை வங்கிகளைத் தனியார் மயமாக்கும் திட்டத்தை இந்திய ஒன்றிய அரசு கைவிடவேண்டும் என வலியுறுத்துகிறோம்!” என குறிப்பிட்டுள்ளார்.








