தமிழ்நாட்டுக்கு என ஒரு கொடியை அறிமுகம் செய்ய வேண்டும்: திருமாவளவன்

தமிழ்நாட்டுக்கு என ஒரு கொடியை அறிமுகம் செய்ய வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கோரிக்கை வைத்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன் கூறியிருப் பதாவது: மொழிவழி அடிப்படையாக…

தமிழ்நாட்டுக்கு என ஒரு கொடியை அறிமுகம் செய்ய வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கோரிக்கை வைத்துள்ளார்.

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன் கூறியிருப் பதாவது:

மொழிவழி அடிப்படையாக மாநிலங்கள் பிரிக்கப்பட்ட நாளை, கர்நாடகா, ஆந்திரா, கேரளா, தெலுங்கானா உள்ளிட்ட தென்னிந்திய மாநிலங்கள், மாநிலம் பிறந்தநாள் என்ற பூரிப்போடு கொண்டாடி வருகின்றனர். கர்நாடகா மாநிலம் தனி மாநிலக் கொடி ஏற்றி கொண்டாடி வருவதைப் பார்க்கிறோம்.

அதே போல் தமிழ்நாடும் அன்றுதான் மொழிவழி மாநிலமாக பிரிந்தது. எனவே அந்த நாளை, தமிழர்களும் கொண்டாட வேண்டும் என பரவலாகக் கோரிக்கைகள் வலுத்து வருகின்றன. நவம்பர் 1ஆம் தேதி தமிழ்நாடு பிறந்த நாளை, தமிழர் இறையாண்மை நாளாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் கொண்டாட இருக்கின்றோம்.

எனவே தமிழ்நாடு அரசு இந்த நாளை கொண்டாடுவதற்கு அதிகாரபூர்வமான அறிவிப்பை வெளியிட வேண்டும். தமிழ்நாட்டுக்கு என ஒரு கொடியை அறிமுகம் செய்ய வேண்டும். அந்த நாளில் சாதி,மதம் அனைத்தையும் கடந்து தமிழ்நாட்டு மக்கள் என்று அனைவரும் ஒன்றிணைவோம். அதற்குரிய நாளாக நவம்பர் 1 ஆம் தேதி திகழ வேண்டும். இதனை முதலமைச்சர் பார்வைக்கு முன்வைக்கிறோம் . இவ்வாறு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.