கலகலப்பு திரைப்பட பாணியில் ஆந்திராவில் கொள்ளையடிக்க சென்ற போது ஜன்னலில் சிக்கிக் கொண்ட நபரை போலீசார் கைது செய்தனர்.
ஆந்திர மாநிலம் திருப்பதி அடுத்த ஸ்ரீகாகுளம் ஜாடுபுடியில் எல்லையம்மன் கோயில் உள்ளது. புகழ்பெற்ற இந்த கோயிலில் ஆண்டுதோறும் மார்ச் மாதம் திருவிழா நடைபெறுவது வழக்கம். இதன்படி நடந்த திருவிழாவில் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த பக்தர்கள் உண்டியலில் பணம், நகை என தங்களது காணிக்கைகளை செலுத்தினர். இரவு அனைவரும் சென்ற பின் பூசாரி தனது வீட்டிற்கு செல்வதை அங்கு மறைந்திருந்து நோட்டமிட்ட திருடன் ஒருவன், கோயில் ஜன்னலில் இருந்த கம்பிகளை நீக்கி விட்டு உள்ளே குதித்துள்ளான்.
பின்னர், அம்மன் சிலையில் இருந்த நகைகள் மற்றும் உண்டியலில் இருந்த பணத்தை மூட்டையில் கட்டி ஜன்னல் வழியாக வெளியேற முயற்சித்தபோது, ஜன்னலில் சிக்கியுள்ளார். அந்த நபர் வெகு நேரம் முயற்சி செய்தும் ஜன்னலில் இருந்து மீள முடியாததால் களைப்பில் அப்படியே உறங்கியுள்ளார். இதனையடுத்து காலை கோயிலுக்கு வந்த பக்தர்கள், ஜன்னலில் சிக்கியிருந்த திருடனை கண்டு அதிர்ச்சியடைந்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து அங்கு வந்த போலீசார் அவனை கைது செய்தனர்.
Advertisement: