பொது நுழைவுத் தேர்வு விவகாரம்; பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம்

அனைத்து மத்திய பல்கலைக்கழகங்களுக்கும் பொது நுழைவுத் தேர்வை கட்டாயமாக்கும் நடவடிக்கையை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். இந்தியா முழுவதும் உள்ள 45 மத்திய பல்கலைக்கழகங்கள்…

அனைத்து மத்திய பல்கலைக்கழகங்களுக்கும் பொது நுழைவுத் தேர்வை கட்டாயமாக்கும் நடவடிக்கையை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

இந்தியா முழுவதும் உள்ள 45 மத்திய பல்கலைக்கழகங்கள் மற்றும் அதன் இணைப்புக் கல்லூரிகளில் உள்ள பல்வேறு இளநிலை மற்றும் முதுநிலை படிப்புகளுக்கான 1.8 லட்சம் இருக்கைகளை நிரப்ப ஏதுவாக 2022-2023-ம் கல்வியாண்டிலிருந்து மத்திய பல்கலைக்கழக நுழைவுத் தேர்வு நடத்தப்படும் என மத்திய கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், அனைத்து மத்திய பல்கலைக்கழகங்களுக்கும் பொது நுழைவுத் தேர்வை கட்டாயமாக்கும் நடவடிக்கையை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். இதுதொடர்பாக அவர் எழுதிய கடிதத்தில், மருத்துவ மாணவர் சேர்க்கைக்கு நீட் தேர்வை அறிமுகப்படுத்தியதோடு மட்டுமல்லாமல், உயர்கல்வி மாணவர் சேர்க்கையிலும் நுழைவுத் தேர்வை கொண்டுவரும் ஒன்றிய அரசின் முயற்சி இது என தமிழ்நாடு அரசு கருதுகிறது.

நீட் தேர்வைப் போலவே இந்த பொது பல்கலைக்கழக நுழைவுத் தேர்வும், நாடு முழுவதும் உள்ள பல்வேறு பள்ளிக் கல்வி முறைகளை குறைத்து மதிப்பிட வழிவகுப்பதோடு,  மாணவர்கள் தங்களது நுழைவுத் தேர்வு மதிப்பெண்களை அதிகரிக்க பயிற்சி மையங்களைச் சார்ந்திருக்கும் ஒரு சூழலை ஏற்படுத்திவிடும் என்பதில் ஐயமில்லை என அந்த கடிதத்தில் முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், எந்தவொரு நுழைவுத் தேர்வும், பல்வேறு மாநிலப் பாடத் திட்டங்களில் படித்த மாணவர்கள் அனைவருக்கும் சமமான வாய்ப்பினை வழங்கிடாது என்பதை மீண்டும் அழுத்தமாக தெரிவிப்பதோடு பெரும்பாலான மாநிலங்களில் 80 விழுக்காட்டிற்கும் அதிகமான மாணவர்கள் மாநிலப் பாடத்திட்டங்களில் பயின்று வருபவர்கள், இந்த மாணவர்கள் பெரும்பாலும் விளிம்புநிலைப் பிரிவினரைச் சேர்ந்தவர்களாவர் என அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

ஒன்றிய அரசின் தற்போதைய போக்கு மற்றொரு விரும்பத்தகாத நடவடிக்கை என்றே தாங்கள் கருதுவதாகக் குறிப்பிட்டுள்ள முதலமைச்சர், இந்த நடவடிக்கையை உடனடியாகத் திரும்பப் பெற்றிட வேண்டுமென்று பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.