விலங்கு என்ற வெப் தொடரை இயக்கி புகழ்பெற்ற, பிரசாந்த் பாண்டிராஜ் இயக்கத்தில் நடிகர் சூரி நடித்துள்ள திரைப்படம் ‘மாமன்’. இப்படம் இன்று திரையரங்குகளில் வெளியானது. இதனிடையே இப்படம் வெற்றிப் பெற வேண்டும் என வேண்டி, சூரியின் சொந்த ஊரான மதுரையில் அவரது ரசிகர்கள் மண்சோறு சாப்பிட்டனர்.
மேலும் இதுதொடர்பாக பேசிய சூரியின் ரசிகர்கள்,
“மாமன் படம் மிகப்பெரிய வெற்றி பெற வேண்டும். ரசிகர்கள் இந்த படத்தை தியேட்டரில் கொண்டாட வேண்டும் என்ற வேண்டுதலை அறுபடை வீடுகளில் முதல் வீடான திருப்பரங்குன்றத்தில் முருகனிடம் வேண்டியுள்ளோம். படம் வெற்றி பெற வேண்டும் என மண் சோறு சாப்பிட்டு உள்ளோம். மண்ணின் மைந்தன் அண்ணன் சூரியின் பெயரில் சிறப்பு அர்ச்சனை செய்துள்ளோம். படம் தொடர்பான காட்சிகளைப் பார்க்கும்போது படம் சிறப்பாக இருக்கும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது” என தெரிவித்தனர்.
இந்நிலையில் இதுகுறித்து பேசியுள்ள நடிகர் சூரி,
“மாமன் படம் வெற்றி அடைய மதுரையில் மண் சோறு சாப்பிட்டவர்களை தம்பிகள் என்று சொல்வதற்கே எனக்கு வெட்கமாக உள்ளது. தம்பிகளா, இது ரொம்ப முட்டாள் தனமானது. படம் நன்றாக இருந்தால், கதை நன்றாக இருந்தால் அந்த படம் ஓடும். அதை விட்டு விட்டு மண் சோறு சாப்பிட்டால், படம் எப்படி எடுத்தாலும் ஓடி விடுமா என்ன?.
மிகவும் வேதனையாக இருக்கிறது. அந்த பணத்திற்கு 4 பேருக்கு தண்ணீர், மோர், உணவு வாங்கி கொடுத்திருக்கலாம். இது போன்ற செயலை செய்பவர்கள் எனது ரசிகர்களாக இருக்கக் கூட தகுதியற்றவர்கள்” என தெரிவித்துள்ளார். சூரியின் இந்த கருத்தை பலரும் வரவேற்று வருகின்றனர்.








