தமிழ்நாடு உட்பட எந்த மாநிலத்தையும் இரண்டாக பிரிக்கக் கூடிய திட்டம் ஏதும் இல்லை என மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் தமிழ்நாடு உட்பட எந்த ஒரு மாநிலத்தையாவது பிரிக்க கூடிய திட்டம் எதுவும் மத்திய அரசிடம் உள்ளதா என, மக்களவையில் கேள்வி எழுப்பிய தமிழ்நாட்டைச் சேர்ந்த மக்களவை உறுப்பினர்கள், அதன் விவரங்களை அளிக்குமாறு கோரினர். மேலும், தமிழ்நாடு உட்பட வேறு எந்த மாநிலத்தையாவது இரண்டாக பிரிக்க தனிநபர் அல்லது அமைப்புகளிடம் இருந்து மத்திய அரசுக்கு கோரிக்கை வந்துள்ளதா எனவும் அவர்கள் எழுத்துப் பூர்வமாக கேள்வி எழுப்பி இருந்தனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்தக் கேள்விகளுக்கு மத்திய உள்துறை இணை அமைச்சர் நித்தியானந்த் ராய், எழுத்துப்பூர்வமாக பதிலளித்துள்ளார். அதில் புதிய மாநிலங்களை உருவாக்க தனிநபர்கள் மற்றும் அமைப்புகளிடம் இருந்து அவ்வப்போது கோரிக்கைகள் வந்தவண்ணம் உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். ஒரு மாநிலத்தை பிரிப்பது, நாட்டின் கூட்டாட்சி அரசியலின் மீதான பாதிப்பை ஏற்படுத்தும் எனவும், விதிமுறைகள், வலுவான காரணிகளை கருத்தில் கொண்டே மாநிலங்களை பிரிக்க முடியும் என்றும் தெரிவித்தார்.
எனவே தமிழ்நாடு உட்பட இந்தியாவில் எந்த ஒரு மாநிலத்தையும் இரண்டாக பிரிக்கக் கூடிய திட்டம் ஏதும் பரிசீலனையில் இல்லை என மத்திய உள்துறை இணை அமைச்சர் நித்தியானந்த் ராய் கூறினார்.