தேனியில் அரிக்கொம்பன் யானை நடமாட்டத்தால் மேகமலைக்கு சுற்றுலா செல்வதற்கு கடந்த ஒரு மாத காலமாக விதிக்கப்பட்ட தடை நீக்கப்படுவதாக வனத்துறையினர் அறிவித்துள்ளனர்.
கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் மூணாறு அருகே உள்ள சின்னக்காணலில்
பிடிக்கப்பட்ட அரிக்கொம்பன் யானையானது கடந்த ஏப்ரல் 30-ஆம் தேதியன்று பெரியாறு
புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட வனப்பகுதியில் விடப்பட்டது. அங்கிருந்து
அரிக்கொம்பன் யானை அருகில் உள்ள தமிழகத்தின் ஸ்ரீவில்லிபுத்தூர் – மேகமலை
புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட வனப்பகுதிக்குள் நுழைந்தது. இதனால் பாதுகாப்பு
கருதி மேகமலை செல்ல சுற்றுலாப் பயணிகளுக்கு வனத்துறையினர் தடை விதித்திருந்தனர்.
மேலும் மேகமலை, ஹைவேவிஸ், மணலாறு, இரவங்கலாறு, வென்னியாறு, மகாராஜா மெட்டு உள்ளிட்ட ஹைவேவிஸ் பேரூராட்சிக்கு உட்பட்ட 7 மலைக்கிராம மக்களும் தேவையின்றி வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியது.
மேலும் அரசுப் பேருந்துகள் தவிர்த்து இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்களிலும்
உள்ளூர் மக்கள் மலைச் சாலையில் பயணம் செய்ய தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில்
மேகமலை வனப்பகுதிகளில் இருந்து தரையிறங்கிய அரிக்கொம்பன் கடந்த மே 27ஆம்
தேதியன்று கம்பம் நகருக்குள் புகுந்த நிலையில் ஜூன் 5-ஆம் தேதியன்று
சின்னமனூர் அருகே உள்ள சின்னஓவுலாபுரம் வன பெருமாள் கோயில் ஒட்டிய
வனப்பகுதியில் பிடிக்கப்பட்ட அரிக்கொம்பன் யானை அங்கிருந்து திருநெல்வேலி
மாவட்டத்தில் உள்ள களக்காடு – முண்டந்துறை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட
அடர்ந்த வனப்பகுதியில் விடப்பட்டது.
இதனால் மேகமலை செல்ல சுற்றுலாப் பயணிகளுக்கு கடந்த ஒரு மாதமாக விதிக்கப்பட்ட தடையை வனத்துறையினர் தற்போது விலக்கிக் கொண்டுள்ளனர். சுற்றுலா பயணிகள் வழக்கம் போல மேகமலைக்கு சுற்றுலா செல்லலாம் எனவும், இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் உள்ளூர் பொதுமக்கள் மட்டுமின்றி அனைவரும் எப்போதும் போல மலைச் சாலையில் பயணிக்கலாம் என்றும் சின்னமனூர் வனத்துறையினர்
அறிவித்துள்ளனர்.
—-ரெ.வீரம்மாதேவி







