உலக நாடுகளே வியக்கும் வகையில் தமிழகத்தில் ‘மக்களைத் தேடி மருத்துவம் திட்டம்’
செயல்படுத்தப்பட்டு கொண்டிருப்பதாக தூத்துக்குடி மக்களவை உறுப்பினர்
கனிமொழி தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அருகிலுள்ள காயாமொழி அரசு ஆரம்ப
சுகாதார நிலையத்தில் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் கட்டப்பட்ட புதிய
மருத்துவ கட்டிடங்கள் திறப்பு விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில்
தூத்துக்குடி மக்களவை உறுப்பினர் கனிமொழி, சுகாதாரத் துறை அமைச்சர்
மா.சுப்பிரமணியன், மீன்வளத் துறை அமைச்சர் அனிதா ஆர் ராதாகிருஷ்ணன்
தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் செந்தில்ராஜ் உள்ளிட்ட பலர் கலந்து
கொண்டனர்.
தொடர்ந்து ரூ.1.05 கோடி மதிப்பில் கட்டப்பட்ட காயாமொழி ஆரம்ப சுகாதார நிலையம் , சாத்தான்குளம், ஒட்டநத்தம் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் கட்டப்பட்ட புதிய சித்தா மருத்துவப் பிரிவு கட்டிடம் மற்றும் மாப்பிள்ளையூரணி ஆரம்ப சுகாதார நிலையத்தில் கட்டப்பட்ட செவிலியர்கள் குடியிருப்பு விடுதிக்கான புதிய கட்டிடங்களை கனிமொழி திறந்து வைத்தார்.
அதனைத் தொடர்ந்து பேசிய கனிமொழி கூறியதாவது:
மக்களைத் தேடி மருத்துவம் திட்டம் நாம் பெருமையோடு சொல்லக்கூடிய வகையில் செயல்பட்டு வருகிறது. தமிழகத்தில் மக்கள் மருத்துவத்தை தேடி வர வேண்டாம். மக்களைத் தேடி மருத்துவ வசதிகள் சென்று கொண்டிருக்கிறது. உலக நாடுகளே வியக்கும் வகையில் மக்களைத் தேடி மருத்துவ திட்டம் செயல்படுகிறது என நாம் பெருமையோடு சொல்லிக் கொள்ளலாம்.
மேலும் தமிழகத்தில் காலை உணவு இல்லாமல் பசியினால் பல குழந்தைகள் பாடத்தில் கவனம் செலுத்த முடியாமல் தவித்து வருகின்றனர். இதற்காக காலை சிற்றுண்டி திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. வரும் ஆண்டில் இந்த திட்டம் தமிழக முழுவதும் செயல்படுத்தப்படும் என்று கனிமொழி தெரிவித்தார்.








