பூந்தமல்லியில் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்தபோது விசிலை விழுங்கிய ஒரு வயது பெண் குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது.
பூந்தமல்லி, லட்சுமி புரம் ரோடு, பத்மாவதி நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஆனந்தராஜ் என்பவர் காய்கறி வியாபாரம் செய்து வருகிறார். இவரது மனைவி வனஜா. இவர்களுக்குக் கயல்விழி என்ற 1 வயது பெண் குழந்தையும் உள்ளது.
இந்த நிலையில் வழக்கம் போல் குழந்தை வீட்டில் விளையாட்டு பொருட்களை வைத்து விளையாடி கொண்டிருந்தது. அப்போது அங்கிருந்து விசிலை எடுத்து விழுங்கியதில் மூச்சு திணறல் ஏற்பட்டு குழந்தை கயல்விழி மயங்கியது.
இதனைக் கண்டு பெற்றோர் அலறி அடித்துக் கொண்டு குழந்தை தூக்கிய போது குழந்தை மூச்சுத் திணறலால் மயங்கியது. இதையடுத்து குழந்தையின் முதுகில் தட்டியபோது வாயிலிருந்து விசில் கீழே விழுந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்து அப்போதுதான் குழந்தை விசிலை விழுங்கியது தெரியவந்தது.
இதையடுத்து போரூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர் அங்குப் பரிசோதனை செய்த மருத்துவர்கள் குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாகத் தெரிவித்தனர். இதுகுறித்து பூந்தமல்லி போலீசருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இறந்து போன குழந்தை கயல்விழி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர். விளையாடும் போது குழந்தை விசில் விழுங்கி இறந்து போன சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.







