தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு மலைப் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட புதிய வகைப் பல்லி இனத்திற்கு முத்து செதில் பல்லி என பெயரிடப்பட்டுள்ளது.
மகாராஷ்டிரா முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரேயின் மகன் தேஜஸ் தாக்கரே தலைமையில் தாக்கரே வைல்டு லைவ் பவுண்டேஷன் என்ற அமைப்பு இயங்கி வருகிறது. இந்த அமைப்பு இந்தியா முழுவதும் பல்வேறு பகுதிகளில் பல் உயிரினங்கள் கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் அந்த அமைப்பைச் சேர்ந்த ஐந்து ஆராய்ச்சியாளர்கள் குழு வல்லநாடு, காப்புக்காடு மற்றும் கோவில்பட்டி அருகே உள்ள குருமலை காப்புக்காடுகளில் ஆய்வு மேற்கொண்டனர். இந்த குழுவில் திருநெல்வேலியைச் சேர்ந்த ஊர்வன பாதுகாப்பு ஆய்வாளர்கள் ரமேஸ்வரன் மாரியப்பன் இருந்துள்ளார். இவர்கள் பார்வதி அம்மன் கோவில், வல்லநாடு காப்புக்காடு, மணக்கரை மற்றும் குருமலை காப்புக் காட்டில் உள்ள பெருமாள் கோவில் அருகே புதிதாக ஒரு பல்லி இனத்தினை கண்டுபிடித்தனர்.
இந்த பல்லிக்கு குவார்ட்சைட் புரூக்லிஷ் கெக்கோ அல்லது தூத்துக்குடி ப்ரூக்கிஷ் கெக்கோ என்றும் தமிழில் முத்து செதில் பல்லி எனப் பெயரிடப்பட்டுள்ளது.
இந்த பல்லி இனத்தைப் பொறுத்தவரை இந்திய அளவில் 53 வது பல்லி இனமாகவும், தமிழக அளவில் 7 வது பல்லி இனமாகவும் கண்டறியப்பட்டுள்ளது.
இந்த அரிய வகை பல்லி இனம் தனித்துவம் வாய்ந்ததாகும். அதன் முதுகு செதில்கள், தொடைப்பகுதி வினோதமாக உள்ளது.எனவே அப்பல்லி இனத்திற்கு முத்து செதில்கள் எனப்பபெயரிடப்பட்டுள்ளது.
—-ரெ.வீரம்மாதேவி







