நாம் தமிழர் கட்சி உழவர் பாசறை சார்பில் இன்று(ஜூன்.15) திருச்செந்தூர் அருகே உள்ள பெரியதாழை பகுதியில் பனைமரக் கள் இறக்கும் போராட்டம் நடைபெற்றது. இதில் அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், கல் இயக்க ஒருங்கிணைப்பாளர் நல்லுசாமி, தமிழ்நாடு நாடார் சங்க தலைவர் முத்து ரமேஷ் மற்றும் நாம் தமிழர் கட்சியினர் பங்கேற்றனர்.
தொடர்ந்து ஏணி போல் ஏறுவதற்கு ஏற்ப வடிவமைக்கப்பட்ட பனை மரத்தில் ஏறிய சீமான் கள்ளை இறக்கி போராட்டத்தில் ஈடுபட்ட நாதக தொண்டர்களுக்கு வழங்கினார். பின்னர் ஆண், பெண் தொண்டர்கள் கள்ளை குடித்து போராட்டத்திற்கு வரவேற்பு தெரிவித்தனர். சீமானுடன் பனையேறும் தொழிலாளர்களும் பங்கேற்றனர்.இந்த போராட்டத்தில் பனைமரம் ஏறிய சீமானின் கால்களில் காயம் ஏற்பட்டு, ரத்தம் கசிந்தது.








