இலங்கையில் சிறைபிடிக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களின் விசைப்படகுகளையும், சிறையில்வாடும் மீனவர்களையும் விடுவிக்கக்கோரி ராமேஸ்வரம் மீனவர்களின் காலவரையற்ற வேலை நிறுத்தப்போராட்டம் 3 வது நாளாக தொடர்கிறது.
இலங்கை கடற்படையினரால் கடந்த 2018 முதல் 2022ஆம் ஆண்டு வரை சிறை பிடிக்கப்பட்ட தமிழக மீனவர்களின் 80 படகுகளையும், 10 நாட்டுப்படகுகளையும் உடனடியாக விடுவிக்கவேண்டும். அதேபோல, இலங்கைச்சிறையில் வாடும் தமிழக மீனவர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும். மன்னார் வளைகுடா, பாக்நீரிணை, மற்றும் வங்காளவிரிகுடா கடலில் மீன் பிடிக்கும் இந்திய மீனவர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும். படகு ஒன்றுக்கு தற்போது வழங்கப்படும் 1800 லிட்டர் டீசல் மானியத்தை 3000 லிட்டராக அதிகரித்து வழங்க வேண்டும்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
கடந்த 2014 முதல் 2018 ஆம் ஆண்டுவரை இலங்கையில் பிடிபட்டிருந்த படகுகளில் இலங்கை அரசு விடுவித்தும், மீட்க முடியாமல் சேதமடைந்த 125 விசைப்படகுகளுக்கு தமிழக அரசு 5 லட்சம் ரூபாய் வழங்கிய நிவாரணம் வழங்கியது. ஆனால், இன்னும் 7-க்கும் மேற்பட்ட படகுகளுக்கு நிவாரணம் வழங்காமலிருப்பதால் உடனடியாக அந்தப்படகுகளுக்கும் நிவாரணம் வழங்கவேண்டும் என்று பல்வேறு கோரிக்கைகளை மத்திய மாநில அரசுகள் உடனடியாக நிறைவேற்ற வலியுறுத்தி கடந்த 9ம் தேதி முதல் இராமேஸ்வரம் மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.
3வது நாளாக தொடரும் இந்தப் போராட்டத்தை மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்காவிட்டால், கோரிக்கைகளை வலியுறுத்தி வருகின்ற 13 ஆம் தேதி தங்கச்சிமடத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக மீனவர்கள் அறிவித்துள்ளனர்.
மீனவர்களின் போராட்டத்தால் ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் 800 க்கும் அதிகமான படகுகள் மீன்பிடிக்கச்செல்லாமல் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. 10 ஆயிரத்திற்கும் அதிகமான மீன்பிடி தொழிலாளர்கள் மற்றும் சார்பு தொழிலாளர்கள் வேலையை இழந்துள்ளனர். எப்போதும் பரப்பாகக்காணப்படும் மீன்பிடி துறைமுகம் தற்போது வெறிச்சோடிக் காணப்படுகிறது.