சென்னை அண்ணா சாலையில் கம்பீரமாய் கையை தூக்கி நிற்கும் சிலை தான், பேரறிஞர் அண்ணாவுக்கு முதன் முதலில் வடிவமைக்கப்பட்ட சிலை. இந்த சிலை உருவான கதை மிகவும் சுவாரஸ்யமானது.
பேரறிஞர் அண்ணா, திமுக என்ற அரசியல் கட்சியை நிறுவி, தன் பேச்சாலும், எழுத்தாலும் தமிழ்நாட்டு இளைஞர்களிடையே புத்தெழுச்சியை உருவாக்கியவர். தமிழ்நாட்டில் ஆளும்கட்சியாக இருந்த காங்கிரசை மெகா கூட்டணி மூலம் எதிர்க்கட்சியாக்கியவர். 1967-ம் ஆண்டு முதலமைச்சராக பொறுப்பேற்ற அண்ணா, சென்னையில் இரண்டாம் உலகத் தமிழ் மாநாட்டை நடத்த ஆர்வமாக செயலாற்ற தொடங்கினார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
எம்ஜிஆர், அச்சமயம் பரங்கிமலை தொகுதியின் எம்.எல்.ஏ.வாக இருந்தார். தானும் மற்ற கழக நிர்வாகிகளும், பல மணி நேரம் மேடைகளில் பேசுவதால் கிடைக்கும் மக்கள் ஆதரவு, எம்ஜிஆர் சில நிமிடங்கள் அவர் முகத்தை காட்டினாலே போதும் என அண்ணா கூறினார். அத்துடன் எம்ஜிஆரை இதயக்கனி என வாஞ்சையுடன் அழைத்தார் அண்ணா.
எம்ஜிஆர்., அண்ணாவிற்கு சிலை வைக்க வேண்டும் என்ற தனது ஆசையை அண்ணாவிடம் பல முறை கூறினார். ஆனால், அண்ணா மறுத்துவிட்டார். சிலை வைப்பதில் மிகவும் பிடிவாதமாக இருந்த எம்.ஜி.ஆரின் அன்புத் தொல்லைகளை சந்தித்த அண்ணா, கடைசியில் ஒருவழியாக ஒப்புதல் தந்தார். அண்ணா சாலை அப்போது மவுண்ட் சாலை என அழைக்கப்பட்டது. மவுண்ட் சாலையில் மெரினா கடற்கரை செல்ல வழி பிரியும், வாலாஜா சாலை சந்திப்பில் அண்ணா சிலை வைப்பது என்று முடிவெடுத்தார் எம்ஜிஆர்… அண்ணாவின் புகைப்படங்களை வைத்து வடித்த சிலைகள், எம்.ஜி.ஆர். எதிர்பார்த்ததுபோல் வரவில்லை.
அண்ணாவே மாடலாக வந்து அமர்ந்தால்தான் நீங்கள் நினைக்கும் வகையில் சிலை வருவது சாத்தியம் என்று சிற்பிகள் கூறினர். பிறகு அண்ணாவையே சிலைக்கு மாடலாக அமர வைத்து சிலையை வடித்தனர். உலகத்தமிழ் மாநாட்டையொட்டி 01.01.1968 அன்று நீதிக்கட்சித்தலைவர் சர்.ஏ.ராமசாமி முதலியார், அண்ணா சிலையை திறந்து வைத்தார். காமராஜருக்கு பிறகு, உயிருடன் இருந்தபோதே சிலை வைக்கப்பட்ட சிறப்பு, அண்ணாவையும் சாரும். இந்த அண்ணா சிலைதான், தற்போது சென்னையின் முக்கிய அடையாளங்களில் ஒன்றாக திகழ்கிறது.
– ரா.தங்கபாண்டியன், நியூஸ் 7 தமிழ்