பொள்ளாச்சி ஆழியார் அணையில் இருந்து ஒட்டன்சத்திரம் பகுதிக்கு தண்ணீர் கொண்டு செல்லும் திட்டத்திற்கு விவசாயிகளின் எதிர்ப்புக்கு பேசி தீர்வு காணப்படும் என அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார்.
பொள்ளாச்சி அருகே உள்ள ஆழியார் அணையில் இருந்து பழைய ஆயக்கட்டு பாசனத்தில் முதல் போக சாகுபடிக்காக ஆழியார் மின் உற்பத்தி நிலையம் வழியாக தண்ணீர் திறக்கப்பட்டது. அணையிலிருந்து வெளியே வந்த தண்ணீரை மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் விவசாயிகள், பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆகியோர் மலர் தூவி வரவேற்றனர். 152 நாட்களுக்கு 1,205 மில்லியன் கனஅடி அளவிற்கு திறந்து விடும் தண்ணீர் மூலம் ஆழியார் பழைய ஆயக்கட்டு பகுதியில் உள்ள 6 ஆயிரத்து 400 ஏக்கர் நன்செய் நிலங்கள் பயன் பெறுவதாக தெரிவித்த விவசாயிகள், ஆழியாறு அணையிலிருந்து ஒட்டன்சத்திரம் பகுதிக்கு தண்ணீர் கொண்டு செல்லும் திட்டத்தை கைவிட வேண்டும் எனக்கூறி அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் மனு அளித்தனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
மனுவை பெற்று கொண்ட பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், ஆழியாறு அணையிலிருந்து ஒட்டன்சத்திரம் பகுதியில் தண்ணீர் கொண்டு செல்லும் திட்டத்திற்கு பரம்பிக்குளம் ஆழியாறு பாசன விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளதாக கூறினார். இந்தப் பிரச்சினையை முதலமைச்சர் கவனத்திற்கு கொண்டு சென்று பேசி தீர்வு காணப்படும் என்று கூறினார். அமைச்சரிடம் செய்தியாளர்கள் தமிழ்நாடு மின் கட்டணம் உயர்த்தப்படுகிறது என கேள்வியை முன்வைத்தனர். அதற்கு பதிலளித்து பேசிய அமைச்சர் செந்தில்பாலாஜி, யூகத்தின் அடிப்படையில் செய்திகளை கேட்டு பிரேக்கிங் நியூஸ் உருவாக்க வேண்டாம் என்று மழுப்பலாக பதிலளித்து சென்றார்.