கஞ்சா போதையில் ரியல் எஸ்டேட் உரிமையாளரை வம்புக்கிழுத்து, மது பாட்டில்கள் மற்றும் அரிவாளால், ஓட ஓட விரட்டி படுகொலை செய்த 3 பேர் காவல்நிலையத்தில் சரணடைந்தனர். கூலிப் படையிடம் மற்றும் போதை கும்பல்களால் காஞ்சிபுரம் மாவட்டம் கொலை நகராமாக மாறி வருவது பொது மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது.
காஞ்சிபுரம் மாவட்டம் சென்னை – பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் ராஜகுளம் என்ற பகுதியில் சுமார் 30 ஆண்டுகளாக மளிகை கடை வைத்து நடத்தி வந்தவர் சிவஞானம்.
இவருக்கு திருமணம் ஆகி மூன்று மகள்கள் உள்ளனர். இப்பகுதியில் பல ஆண்டுகளாக வசித்து வருவதால் அனைவருக்கும் நன்கு அறிமுகமாகி இருந்தார். இவர் மளிகை கடையோடு, ரியல் எஸ்டேட் வியாபாரமும் செய்து வந்தார். சம்பவத்தன்று இரவு, மளிகை கடையில் சிவ ஞானம் வியாபரம் செய்து கொண்டிருந்த, கடை அருகே, பாஸ்புட் கடை நடத்திய வரும், சரவணன், மற்றும் கூட்டாளிகள் கஞ்சா போதையில் கடையில் கூச்சலிட்டுள்ளனர்.
இதை சிவஞானம் தட்டிக்கேட்டுள்ளார். ஆத்திரம் அடைந்த சரவணனும் அவரது கூட்டாளிகளும் வேண்டுமென்றே சிவஞானத்தை வம்புக்கு இழுத்து தகராறில் ஈடுபட்டுள்ளனர். சிவஞானம் சத்தம் போட்டதால், ஆத்திரம் அடைந்த கும்பல், தாங்கள் குடித்துக்கொண்டிருந்த பீர் பாட்டில்களை உடைத்து, சிவஞானத்தை தாக்கியுள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த, சிவஞானம் கடையை விட்டு இறங்கி ரோட்டில் ஓடியுள்ளார்.
இவரை விரடிய கும்பல், கையில் வைத்திருந்த பீர் பாட்டில்களால் தாக்கியதால் நிலைதடுமாறிய சிவஞானம் கீழே விழுந்துள்ளார். சுற்றி வளைத்த கும்பல் திடீரென கத்தியால், தலை மற்றும் கழுத்தில் சரமாறியாக குத்தியுள்ளனர். இதில் பலத்த காயம் அடைந்த சிவஞானம் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலே துடிதுடித்து இறந்துள்ளார். போதை கும்பல் அங்கிருந்து தப்பிச் சென்றது.
சம்பவம் குறித்து தகவல் அறிந்து, தாலுகா போலீசார் விரைந்து சென்று, இறந்த சிவஞானத்தின் உடலை கைப்பற்றி, உடற்கூராய்விற்காக, அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். படுகொலை சம்பவம் தொடர்பாக சரவணன், உள்ளிட்டோரை தேடிவந்தனர். இரவு சரவணன், ஆபேல் மற்றும் ஐயப்பன் ஆகிய மூவரும் தாலுகா காவல் நிலையத்தில் சரணடைந்தனர்.
கஞ்சா போதை மற்றும் ரியல் எஸ்டேட் விவகாரம் உள்ளிட்ட பல்வேறு சம்பவங்களால் காஞ்சிபுரம் மாவட்டத்தில் சில மாதங்களாக கூலிப்படையினர் தொடர்ச்சியாக கொலை சம்பவங்களில் ஈடுபட்டு வருவதால் கோயில் நகரம் கொலை நகரமாகிவிட்டதாக பொதுமக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.








