குயின்ஸ் லேண்ட் விவகாரம்; 200 கோடி மதிப்பிலான அரசு நிலம் மீட்பு

குயின்ஸ் லேண்ட் மற்றும் பிளசன் டே வில் ஆக்கிரமித்துக் கட்டுப்பட்டிருந்த இடத்திற்குச் சீல் வைத்து 200 கோடி மதிப்பிலான அரசு நிலத்தை வருவாய்த் துறையினர் அதிரடியாக மீட்டுள்ளனர். காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த மேவளூர்குப்பம்…

குயின்ஸ் லேண்ட் மற்றும் பிளசன் டே வில் ஆக்கிரமித்துக் கட்டுப்பட்டிருந்த இடத்திற்குச் சீல் வைத்து 200 கோடி மதிப்பிலான அரசு நிலத்தை வருவாய்த் துறையினர் அதிரடியாக மீட்டுள்ளனர்.

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த மேவளூர்குப்பம் ஊராட்சிக்குட்பட்ட குயின்ஸ்லேண்ட் பொழுதுபோக்கு பூங்கா. சுமார் 200 ஏக்கர் பரப்பளவில் உள்ள இந்த பூங்காவில் அறநிலையத்துறை மற்றும் வருவாய்த் துறைக்குச் சொந்தமான நிலம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு உள்ளதாகப் புகார் எழுந்தது. பாப்பன்சத்திரத்தில் உள்ள காசிவிஸ்வநாதர் மற்றும் வேணுகோபால் சாமி கோவிலுக்குச் சொந்தமான 21 ஏக்கர் நிலத்தை, ஆக்கிரமித்திருப்பதாகக் கூறி இடத்தை காலி செய்ய குயின்ஸ் லேண்ட்க்கு அறநிலையத்துறை சார்பில், ‘நோட்டீஸ்’ அனுப்பப்பட்டது. ஆனால், இதை எதிர்த்து, உயர் நீதிமன்றத்தில், குயின்ஸ் லேண்ட் நிர்வாகத்தினர், மனுக்கள் தாக்கல் செய்தனர்.

நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வந்த போது, இடத்தின் உரிமையாளராகக் கோவிலைக் கருத முடியாது எனவும், அறநிலையத் துறைக்கு சட்டப்படி நடவடிக்கை எடுக்கவும் உரிமை இல்லை. இது இடத்தின் உரிமை தொடர்பான பிரச்சனை, நில நிர்வாக ஆணையரிடம் நிலுவையில் உள்ளது. எனவே, அறநிலையத்துறை இணை ஆணையர் அனுப்பிய நோட்டீஸ் ரத்து செய்யப்படுகிறது என்று உத்தரவிட்டனர். இந்த நிலையில் குயின்ஸ்லேண்ட் பொழுதுபோக்கு பூங்காவில் நீர்நிலை ஆக்கிரமிப்பு மற்றும் அனாதினம் ஆக்கிரமிப்பு என 32.41 சென்ட் நிலத்தை வருவாய்த்துறையினர் அதிரடியாக மீட்டுள்ளனர்.

அண்மைச் செய்தி: ‘’கட்சியை மீட்கும் வழியைப் பாருங்கள்’ – தி.க தலைவர் கி.வீரமணி’

ஸ்ரீபெரும்புதூர் வருவாய்க் கோட்டாட்சியர் சைலேந்திரன் தலைமையில் சென்ற ஸ்ரீபெரும்புதூர் வட்டாட்சியர் ஜெயகாந்தன் மற்றும் வருவாய்த்துறையினர், ஆவடி மாநகர காவல்துறை பாதுகாப்புடன் ஆக்கிரமிப்பிலிருந்த நாகத்தா ஏரியை மீட்டு அங்குக் கட்டப்பட்டு இருந்த ரோப்கார் இயக்கும் கட்டிடம், இமாலய ரைட், நீச்சல் குளம், பேப்பர் போர்ட், பேட்டரி ஸ்கூட்டர், ரயில் தண்டவாளம் என ஆக்கிரமிப்பிலிருந்த அனைத்திற்கும் சீல் வைத்தனர். இதனைத் தொடர்ந்து குயின்ஸ்லேண்ட் நிறுவனத்திற்குச் சொந்தமான ப்லேசண்டே ஹோட்டலில் 5 சொகுசு விடுதிக்குச் சீல் வைத்து நோட்டீஸ் ஒட்டினர். மீட்கப்பட்ட சொத்தின் மதிப்பு 200 கோடி எனக் கூறப்பட்டுள்ளது. பாப்பான் சத்திரம் கிராமத்தில் குயின்ஸ்லேண்ட்க்கு சொந்தமாக 177 ஏக்கர் பட்டா நிலம் உள்ளது. அதனோடு இணைத்து இந்த 32.41 ஏக்கர் நிலத்தை ஆக்கிரமிப்பு செய்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.