சட்டமன்றத்தில் ஒரு சட்டத்தை நிறைவேற்றினால் ஆளுநர் அதற்கு மதிப்பளிப்பதுதான் மக்களாட்சியின் தத்துவம் என முதலமைச்சர் கூறியுள்ளார்.
மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான நீட் நுழைவுத் தேர்விலிருந்து விலக்கு கோரும் மசோதா தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த மசோதா குடியரசுத் தலைவருக்கு அனுப்பாமல் ஆளுநர் நிலுவையில் வைத்திருப்பதை ஆளும் கட்சியும் எதிர்க் கட்சியும் கண்டித்துள்ளன.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இது சம்பந்தமாக தமிழ்நாடு எம்.பிக்கள் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திக்க முயன்றனர். ஆனால் எம்.பிக்களை சந்திக்க அமித்ஷா மறுத்துள்ளார். இதன் காரணமாக எம்.பிக்கள் அதிருப்தியில் உள்ளனர். இச்சூழலில் அனைத்துக்கட்சிக் கூட்டம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று காலை தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் 13 கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.
இதில், நீட் தேர்விலிருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு அளிக்கக்கோரி முதலமைச்சர் தலைமையில் குடியரசுத்தலைவரை சந்திப்பது குறித்த வரைவு தீர்மானத்தை அமைச்சர் மா.சுப்பிரமணியன் முன்வைத்தார். இந்த தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக வெளிநடப்பு செய்துள்ளது.
இதில் உரையாற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “முதலில் நான் கடந்த 2021ல் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து நீட் தேர்விலிருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு குறித்த கோரிக்கையை முன்வைத்தேன். பின்னர் திமுக நாடாளுமன்ற மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர் அவையில் இது தொடர்பாக தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.
இந்த சூழலில்தான் 13-9-2021 அன்று நீட் தேர்விலிருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு அளிக்கும் சட்ட முன்வடிவை சட்டமன்றத்தில் தமிழ்நாடு அரசு நிறைவேற்றியது. இதற்கு குடியரசுத் தலைவரிடம் ஒப்புதல் பெற ஆளுநருக்கு அனுப்பப்பட்டது.
ஆனால் அது அனுப்பப்படாமல் ஆளுநரிடமே நிலுவையில் உள்ளது. சட்டமன்றத்தில் ஒரு சட்டத்தை நிறைவேற்றினால் ஆளுநர் அதற்கு மதிப்பளிப்பதுதான் மக்களாட்சியின் தத்துவம். இது குறித்து நான் நேரில் ஆளுநரை வலியுறுத்தியும் அவர் அதை குடியரசுத் தலைவருக்கு அனுப்பவில்லை.
இதனால் மாநில உரிமையும், சட்டமன்றத்தில் சட்டமியற்றும் உரிமையும் கேள்விக்குள்ளாகப்படும் நிலைமை உருவாகியுள்ளது. இந்த சூழலில்தான் அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்டியுள்ளோம்.” என்று கூறினார்.