இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளராக, மூன்றாவது முறையாக மீண்டும் முத்தரசன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவர் கடந்து வந்த பாதையை தற்போது பார்க்கலாம்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 25 வது மாநில மாநாடு சமூக நல்லிணக்க பாதுகாப்பு மற்றும் மாநில உரிமைகள் மீட்பு எழுச்சி மாநாடாக கடந்த ஆகஸ்ட் ஆறாம் தேதி
தொடங்கி இன்று வரை திருப்பூரில் நடைபெற்றது. மாநாட்டின் தொடக்கநாள் நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளி வாயிலாக உரையாற்றினார். கூட்டணி கட்சித் தலைவர்களான திருமாவளவன், கே.பாலகிருஷ்ணன், கீ.வீரமணி, வைகோ, வேல்முருகன், கே.எஸ்.அழகிரி உள்ளிட்டோர் நேரில் கலந்து கொண்டு மாநாட்டை வாழ்த்தி பேசினார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்தின் மூத்த தலைவர் நல்லகண்ணு, சிபிஐ அகில இந்திய பொதுச் செயலாளர் டி.ராஜா, முத்தரசன், சி.மகேந்திரன், மு.வீரபாண்டியன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகளின் முன்னிலையில் நடைபெற்ற இந்த மாநாட்டில் மூன்றாவது முறையாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளராக முத்தரசன் ஒரு மனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
மாநிலச் செயலாளர் பதவிக்கு சி.மகேந்திரன் மற்றும் முத்தரசன் இடையே கடும் போட்டி நிலவியதாகவும் இறுதியில் ஒருமனதாக முத்தரசன் தேர்வு செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள முத்தரசனின் அரசியல் பயணம் இந்து திணிப்பு போராட்டம் நடைபெற்ற அவரது 15 வயது முதலே தொடங்கி இருக்கிறது. தற்போது 72 வயதாகும் முத்தரசனின் சொந்த ஊர் திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியை அடுத்த அலிவலம் எனும் சிற்றூர்.
பொதுவுடமை சித்தாந்தத்தால் ஈர்க்கப்பட்ட முத்தரசன் பொதுவுடைமைக் கட்சியான இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் பல்வேறு பொறுப்புகளை வகித்திருக்கிறார். அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தின், திருத்துறைப்பூண்டி ஒன்றியத் துணைத் தலைவர், 1970-ல் கட்சியின் திருத்துறைப்பூண்டி நகரக் குழுச் செயலாளர், 1984-ல் விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் தஞ்சாவூர் மாவட்டச் செயலாளராகத் தேர்வு செய்யப்பட்டார்.
பின்னர் 1997-ல் விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் மாநிலச் செயலாளராகத் தேர்வானார். தொடர்ந்து 17 ஆண்டு காலம் அந்தப் பொறுப்பில் அவர் நீடித்தார். மேலும் 2015-ல் கோயம்புத்தூரில் நடைபெற்ற கட்சியின் மாநில மாநாட்டில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அதனைத் தொடர்ந்து 2018-ல் நடைபெற்ற மாநில மாநாடு மற்றும் தற்போது 2022-ல் திருப்பூரில் நடைபெற்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 25-வது மாநாட்டில் மூன்றாவது முறையாக தொடர்ந்து கட்சியின் மாநிலச் செயலாளராக முத்தரசன் தேர்ந்தெடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
– இரா.நம்பிராஜன்