காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்திக்கு பெரிய தலைவலியாக உருவெடுத்துள்ள நேஷனல் ஹெரால்ட் வழக்கு கடந்துவந்த பாதையை விளக்குகிறது இந்த செய்தி தொகுப்பு.
2012-ஆம் ஆண்டில், நேஷனல் ஹெரால்டு பத்திரிகைக்கு சொந்தமான அசோசியேட் ஜர்னல்ஸ் நிறுவனத்தின் ரூ.2,000 கோடி மதிப்பிலான சொத்துகளை யங் இந்தியா நிறுவனத்தின் மூலம் முறைகேடாக கையகப்படுத்தியதாக சோனியா காந்தி, ராகுல் காந்தி உள்ளிட்டோருக்கு எதிராக பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணிய சாமி வழக்கு தொடர்ந்தார். 2014 ஜூன் 26ஆம் தேதி, வழக்கு குற்றம் நடைபெற்றுள்ளதற்கு முகாந்திரம் இருப்பதாக கூறி, விசாரணைக்கு ஆஜராக சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்திக்கு டெல்லி நீதிமன்றம் சம்மன் அனுப்பியது.
அதனைத்தொடர்ந்து, 2014-ஆம் ஆண்டு ஆகஸ்டில் இந்த வழக்கு தொடர்பான விசாரணையை அமலாக்க துறை தொடங்கியது. 2015-ஆம் ஆண்டு பாட்டியாலா நீதிமன்றத்தில் நேரில் ஆஜரான சோனியா காந்தி, ராகுல் காந்தி உள்ளிட்டோருக்கு நிபந்தனையற்ற ஜாமீன் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டது.
தொடர்ந்து 2016-ஆம் ஆண்டு, தங்களுக்கு எதிரான வழக்கை எதிர்த்து சோனியா, ராகுல் காந்தி உள்ளிட்டோர் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், வழக்கு விசாரணைக்கு தடைவிதிக்க மறுத்துவிட்டது. அதே சமயம் நேரில் ஆஜராவதிலிருந்து விலக்கு அளித்தது. 2016-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் சட்ட ரீதியிலான காரணங்களை முன்வைத்து அப்போதைய அமலாக்கத்துறை இயக்குநர் ராஜன் கடோச், வழக்கு விசாரணையை முடித்து வைத்தார்.
இதையடுத்து இயக்குநர் பதவியிலிருந்து அவர் அதிரடியாக நீக்கப்பட்டு, 2016-ஆம் ஆண்டு செப்டம்பரில் கர்னல் சிங் புதிய இயக்குநராக நியமிக்கப்பட்டு, அமலாக்கத்துறை வழக்கு விசாரணையை மீண்டும் தொடங்கியது. 2019-ஆம் ஆண்டு அசோசியேட் ஜர்னல்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான மும்பையில் உள்ள 16 புள்ளி 38 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியது. இந்நிலையில், 2022ஆம் ஆண்டு இன்று ராகுல் காந்தியும், ஜூன் 23ஆம் தேதி சோனியா காந்தியும் ஆஜராக அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.








