10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி உதகை தாவரவியல் பூங்கா ஊழியர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
உதகைக்கு ஆண்டுதோறும் லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். அவ்வாறு வரும் சுற்றுலா பயணிகள் தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, குன்னூர் சிம்ஸ் பூங்கா மற்றும் காட்டேரி பூங்கா உள்ளிட்ட சுற்றுலா தலங்களை அதிகளவு கண்டு ரசித்து செல்கின்றனர். சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து செல்லும் வகையில் பூங்காக்களை தயார் படுத்தும் பணியில் நிரந்தர மற்றும் தற்காலிக பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.
மேலும், தோட்டக்கலைதுறைக்கு சொந்தமான பண்ணைகளிலும் 500-க்கும் மேற்பட்ட
பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இவர்கள் தினக்கூலியாக 400 ரூபாய்
மட்டுமே பெற்று வருகின்றனர். இந்நிலையில் , 5 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றுபவரை
பணி நிரந்தரம் செய்ய வேண்டும். சிறப்பு காலவரை தொகுப்பு ஊதியத்தை வழங்க வேண்டும், அரசாணைபடி அறிவித்த நாள் ஒன்றுக்கு 700 ரூபாய் அடிப்படையில் ஊதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 500 க்கும் மேற்பட்ட ஊழியர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில், பூங்கா ஊழியர்கள் பூங்காவில் உள்ள பழமை வாய்ந்த நூற்றாண்டு மரமான தேவதார் மரத்திற்கு ஊர்வலமாக சென்று கண்ணீருடன் மனு அளித்தனர். மேலும், கோரிக்கைகள் நிறைவேற்றும் வரை போராட்டம் தொடரும் என பூங்கா ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.
—கு.பாலமுருகன்







