நிலவை நெருங்கும் பயணத்தில் அடுத்த வெற்றி! சந்திரயான் 3 சுற்றுவட்டப்பாதை 2-வது முறையாக குறைப்பு!

சந்திரயான் 3 திட்டமிட்டபடி பயணித்து வரும் நிலையில் இன்று இரண்டாவது முறையாக சுற்று வட்டப்பாதை குறைக்கப்பட்டு நிலவை நெருங்கும் முயற்சி வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டுள்ளதாக இஸ்ரோ அறிவித்துள்ளது.  தொட்டு விடும் தூரத்தில் தான் வெற்றி –…

சந்திரயான் 3 திட்டமிட்டபடி பயணித்து வரும் நிலையில் இன்று இரண்டாவது முறையாக சுற்று வட்டப்பாதை குறைக்கப்பட்டு நிலவை நெருங்கும் முயற்சி வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டுள்ளதாக இஸ்ரோ அறிவித்துள்ளது. 

தொட்டு விடும் தூரத்தில் தான் வெற்றி – எட்டிவிடும் தூரத்தில் தான் வானம்
என்பது போல் ஒட்டுமொத்த இந்திய விண்வெளி ஆராய்ச்சியாளர்களின் என்ன ஓட்டமும் சந்திரன் -3 திட்டத்தை பற்றியே ஓடிக்கொண்டு உள்ளது. நிலவின் தென் துருவத்தை ஆராய்வதற்காக இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் சந்திராயன் – 3 திட்டத்தை மிகச் சிறப்பாகவும் கவனமாகவும் உருவாக்கி உள்ளது.

சந்திரயான் 3 விண்கலத்தை சுமார் ரூ.615 கோடியில் இந்திய விண்வெளி ஆய்வு
நிறுவனம் (இஸ்ரோ) வடிவமைத்தது – இந்த விண்கலம் எல்விஎம்-3 ராக்கெட் மூலம்
ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து கடந்த ஜூலை 14-ம் தேதி விண்ணில் செலுத்தப்பட்டது –
அதைத் தொடர்ந்து பெங்களூருவில் உள்ள இஸ்ரோவின் கட்டுப்பாட்டு மையத்தில்
இருந்து விண்கலத்தின் சுற்றுப் பாதையை நீட்டிக்கும் பணிகள் தற்போது
மேற்கொள்ளப்பட்டன.

கடந்த 26 ஆம் தேதி சந்திரயான் – 3 விண்கலத்தின் சுற்றுப்பாதை தூரம் 5-வது முறை
வெற்றிகரமாக மாற்றியமைக்கப்பட்டது. அடுத்தகட்டமாக சந்திரயான் விண்கலம் ஆகஸ்ட் 1-ம் தேதி புவிவட்டப்பாதையில் இருந்து விலக்கப்பட்டு நிலவின் சுற்றுப் பாதைக்குள் தள்ளப்பட்டது. பின்னர் நிலவின் நீள்வட்ட சுற்றுப்பாதைக்குள் சந்திரயான் தன்னை இணைத்துக் கொண்டது.

ஆகஸ்ட் 6 ஆம் தேதி முதல் முறையாக நிலவின் சுற்றுப்பாதையை குறைக்கும் பணி வெற்றிக்கரமாக செயல்படுத்தப்பட்டது. இந்நிலையில் இன்று இரண்டாவது முறையாக நிலவின் சுற்றுவட்டப்பாதையின் உயரம் மேலும் குறைக்கப்பட்டதாக இஸ்ரோ அறிவித்துள்ளது. இன்று மதியம் 1.30 மணி அளவில் இப்பணி வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம் நிலவை நெருங்கும் பயணத்தில் மற்றொரு வெற்றிப்படிகட்டை சந்திரயான் – 3 எட்டியுள்ளது.

இதன் தொடர்ச்சியாக, ஆகஸ்ட் 23ம் தேதி சந்திராயன் – 3ன் லேண்டார் கருவி நிலவில் தரையிரங்கி அதில் இருந்து ரோவர் என்கிற ரோபார்ட் வடிவிலான செயல்பாடு பிரிந்து சென்று ஆய்வு மேற்கொள்ளும் இந்த திட்டத்தை, இந்தியா மட்டும் அல்லாது உலகெங்கிலும் உள்ள ஆராய்ச்சியாளர்கள் ஆர்வத்துடன் எதிர்நோக்கி உள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.