எதிர்க்கட்சிகளின் (இந்தியா) அடுத்த கூட்டம் மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில் நடைபெறும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
நாடாளுமன்ற தேர்தல் முன்னேற்பாடு பணிகளில் அரசியல் கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன. பாஜகவுக்கு எதிராக எதிர்க்கட்சிகளின் முதல் ஆலோசனை கூட்டம் கடந்த ஜூன் மாதம் பீகார் மாநிலத் தலைநகர் பாட்னாவில் நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து இரண்டாவது கூட்டம் ஜூலை மாதம் பெங்களூரில் நடைபெற்றது.
இந்த இரண்டாவது கூட்டத்தில் தான் கூட்டணிக்கு இந்தியா என பெயர் சூட்டப்பட்டது. மூன்றாவது கூட்டம் மும்பையில் உள்ள கிராண்ட் ஹையத் ஹோட்டலில் கடந்த இரு நாட்களாக நடைபெற்றது.
அப்போது 14 பேர் கொண்ட ஒருங்கிணைப்புக் குழு உள்ளிட்ட பல்வேறு குழுக்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. எனினும் “இந்தியா” கூட்டணியில் லோகோ, ஒருங்கிணைப்பாளர் யார் என்பது குறித்த எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. இதனிடையே இந்த கூட்டணியின் அடுத்த கூட்டம் மத்தியப்பிரதேச மாநிலம் போபாலில் நடைபெற அதிக வாய்ப்புகள் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.







