இலங்கையில் இந்த வாரத்துக்குள் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை கொண்ட புதிய பிரதமர் நியமிக்கப்படுவார் என அதிபர் கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
இலங்கையில் நாட்டு மக்களிடையே உரையாற்றிய அதிபர் கோட்டாபய ராஜபக்ச புதிதாக நியமிக்கப்படவுள்ள அரசாங்கத்துடன் கலந்துரையாடிய பின்னர் நிறைவேற்று அதிகாரம் கொண்ட அதிபர் முறைமையை நீக்குவதற்கு தயார் என தெரிவித்தார். மேலும் இந்த வாரத்துக்குள் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை கொண்ட புதிய பிரதமர் நியமிக்கப்படுவார் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்த வாரத்தில் நாடாளுமன்றம் மற்றும் நாட்டு மக்களின் நம்பிக்கையையும் பெறும் வகையில் பிரதமரையும் அமைச்சரவையையும் நியமிக்க நடவடிக்கை எடுப்பதாக அதிபர் கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார். புதிய இடைக்கால அரசாங்கத்தை அமைப்பதற்காக கடந்த சில நாட்களில் பல தீர்மானங்களை எடுத்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், 19வது திருத்தச் சட்டத்தின் உள்ளடக்கங்களை மீண்டும் அமல்படுத்தும் வகையில், நாடாளுமன்றத்திற்கு அதிக அதிகாரங்கள் இருக்கும் வகையில் அரசியலமைப்பில் திருத்தம் செய்ய நடவடிக்கை எடுப்பதாக அதிபர் கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார். நாடாவிய ரீதியில் வன்முறைச் சம்பவங்கள் ஏற்படுவதற்கு தான் கடுமையான கண்டனத்தை தெரிவிப்பதாகவும் கூறினார். இந்த சம்பவம் தொடர்பாக விசாரணைகளை மேற்கொள்வதற்கு காவல்துறைக்கு தான் அறிவுறுத்தியுள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.
புதிய வேலைத்திட்டத்தை முன்வைத்து நாட்டை முன்னோக்கி கொண்டு செல்வதற்கான சந்தர்ப்பத்தை ஏற்படுத்தி தருவேன் என்றும், மக்களின் வாழ்க்கைக்கு தேவையானவற்றை பெற்றுக்கொடுப்பதற்கான வழிமுறைகளை உடனடியாக நடைமுறைப்படுத்த ஒத்துழைப்பு வழங்குமாறும் நாட்டு மக்களுக்கு அதிபர் கோட்டாபய ராஜபக்ச கேட்டுக்கொண்டுள்ளார்.