நீலகிரி மாவட்டம் மசினகுடியில் தேடப்பட்டு வரும் T23 புலியின் நடமாட்டம், 8 நாட்களுக்குப் பிறகு வனத்துறையினர் வைத்துள்ள கேமராவில் பதிவாகி இருக்கிறது.
நீலகிரி மாவட்டம் மசினகுடி, சிங்காரா பகுதிகளில் 40-க்கும் மேற்பட்ட கால்நடைகளையும், 4 பேரையும் அடித்துக் கொன்ற புலியை பிடிக்க வனத்துறையினர் தீவிர தேடுதல் வேட்டை மேற்கொண்டுள்ளனர். 5 ட்ரோன் கேமராக்கள், 85க்கும் மேற்பட்ட தானியங்கி கேமராக்கள், இரண்டு கும்கி யானைகள், மூன்று பயிற்சி பெற்ற மோப்ப நாய்கள் புலியை தேடும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
ஐம்பதுக்கும் மேற்பட்ட வன ஊழியர்கள், 20-க்கும் மேற்பட்ட அதிரடி படையினர், 8 தமிழ்நாடு வன உயரடுக்கு படையினர் உட்பட பல்வேறு குழுக்களாக பிரிந்து புலியை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதற்கிடையே, புதர்களில் பதுங்கியிருக்கும் விலங்குகளின் வெப்பநிலை மூலம் அவற்றை கண்டறியும் நவீன கேமரா பயன்படுத்தப் படுகிறது. இதன் அடிப்படையிலும் புலியை தேடும் பணிகள் தொடர்ந்து வருகிறது.
T23 என பெயரிடப்பட்டுள்ள இந்த ஆண் புலியை வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்தி பிடிக்க முடிவு செய்தனர். கடந்த 17 நாட்களாக புலியின் நடமாட்டத்தை வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர். இந்நிலையில், 18வது நாளாக புலியை தேடும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர். இதற்கிடையே 8 நாட்களுக்குப் பிறகு வனத்துறை யினர் வைத்துள்ள கேமராவில் புலியின் நடமாட்டம் பதிவாகி இருக்கிறது. அதன் அடிப்படையில் அதை தேடி வருகின்றனர்.