“மயிலாடுதுறையில் நேற்று முதல் சிறுத்தையின் நடமாட்டம் தென்படவில்லை” –  மாவட்ட வன அலுவலர் தகவல்!

மயிலாடுதுறை மாவட்டத்தில் நேற்று மதியம் முதல் சிறுத்தையின் நடமாட்டம் குறித்து எந்த தகவலும் பதிவாகவில்லை என நாகப்பட்டினம் மாவட்ட வன அலுவலர் அபிஷேக் தோமர் தெரிவித்துள்ளார். மயிலாடுதுறையில் கடந்த 2-ம் தேதி,  செம்மங்குளம் பகுதியில்…

மயிலாடுதுறை மாவட்டத்தில் நேற்று மதியம் முதல் சிறுத்தையின் நடமாட்டம் குறித்து எந்த தகவலும் பதிவாகவில்லை என நாகப்பட்டினம் மாவட்ட வன அலுவலர் அபிஷேக் தோமர் தெரிவித்துள்ளார்.

மயிலாடுதுறையில் கடந்த 2-ம் தேதி,  செம்மங்குளம் பகுதியில் சிறுத்தையின் நடமாட்டம் தென்பட்டது.  இதுகுறித்து மக்கள் வனத்துறையினரிடம் புகார் அளித்தனர்.  இதனையடுத்து வனத்துறை அதிகாரிகள் சிறுத்தையை தேடும் பணியில் ஈடுபட்டனர்.  சிறுத்தையின் நடமாட்டத்தை கண்காணிக்க ஆங்காங்கே கேமராக்கள் பொருத்தப்பட்டன.

சிறுத்தையின் புகைப்படம் சென்சார் கேமராவில் பதிவானது.  அந்த புகைப்படத்தை மயிலாடுதுறை மாவட்ட வனத்துறையினர் வெளியிட்டனர்.  இதனையடுத்து  அந்த பகுதிகளில் கூண்டுகள் வைக்கப்பட்டு சிறுத்தை பிடிக்கும் பணியை வனத்துறையினர் தீவிரப்படுத்தினர்.  எந்த கூண்டிலும் சிறுத்தை சிக்காத நிலையில் மயிலாடுதுறை ரெயில் நிலையம் அருகே காவிரி ஆற்றுப்பாலம் கீழே சிறுத்தையின் காலடி தடங்கள் இருப்பதாக கூறப்பட்டது.

இதனைத் தொடர்ந்து வனத்துறை அதிகாரிகள் ரெயில் நிலையம் பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர்.  அந்த பகுதியில் சிறுத்தையின் கால்தடங்கள் எதுவும் தெரியாத நிலையில் காவிரி கரையில் முடியுடன் கூடிய கழிவை வனத்துறையினர் கைப்பற்றினர். இது சிறுத்தையின் கழிவு போன்று இருப்பதால் அதை மருத்துவ பரிசோதனைக்காக கொண்டு சென்றனர்.

கடந்த 2 நாட்களாக சிறுத்தை குத்தாலம் தாலுகா காஞ்சிவாய்,  பேராவூர்,  கருப்பூர் பகுதிகளில் சுற்றி வந்த நிலையில், காஞ்சிவாய் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் பொருத்தப்பட்ட கண்காணிப்பு கேமராக்களை வனத்துறையினர் இன்று (ஏப்.10) காலை ஆய்வு செய்தனர்.  மேலும் சிறுத்தை பிடிப்பதற்காக வைக்கப்பட்ட கூண்டுகளிலும் ஆய்வு செய்தனர்.

இந்த நிலையில் , மயிலாடுதுறை மாவட்டத்தில் நேற்று மதியம் முதல் சிறுத்தையின் நடமாட்டம் குறித்து எந்த தகவலும் பதிவாகவில்லை என நாகப்பட்டினம் மாவட்ட வன அலுவலர் அபிஷேக் தோமர் தெரிவித்துள்ளார்.  இதன் காரணமாக அருகாமையில் உள்ள மாவட்டங்களான தஞ்சாவூர் மற்றும் திருவாரூர் மாவட்டங்களிலும் வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அங்கும் சிறுத்தையின் நடமாட்டம் குறித்து கண்காணிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.