இந்தியா பொருளாதார சுதந்திரம் அடைகிற 2வது சுதந்திர போராட்டத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முன்னெடுக்கும் என அக்கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
சென்னை தியாகராய நகரில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில்
கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், சுதந்திர தினத்தையொட்டி தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். பின்னர், அரசியல் சாசன முகவுரை உறுதிமொழி ஏற்கப்பட்டது. அதைத்தொடர்ந்து, அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டன.
இந்நிகழ்வில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் குழு உறுப்பினர்
ஜி.ராமகிருஷ்ணன் மற்றும் நிர்வாகிகள் பல பங்கேற்றனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அதைத்தொடர்ந்து, செய்தியாளர்களைச் சந்தித்த ஜி.ராமகிருஷ்ணன், இந்திய மக்கள் அனைவருக்கும் சுதந்திர தின வாழ்த்துக்கள். சுதந்திரத்திற்காக தியாகம் செய்த நம் முன்னோர்களைப் போற்றுவோம். அவர்கள் போராடி பெற்ற சுதந்திரத்தால் மத சார்பின்மை, கூட்டாட்சி, ஜனநாயகம், சமூக நீதி ஆகிய விழுமியங்களால் அரசியல் சட்டம் உருவானது. ஜனநாயகம், கூட்டாட்சி தத்துவம், சமூக நீதி உள்ளிட்டவை தற்போது தகர்க்கப்பட்டு வருகிறது. இவற்றை பாதுகாக்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இன்று உறுதி ஏற்றுள்ளதாகக் கூறினார்.
அதைத்தொடர்ந்து பேசிய கே.பாலகிருஷ்ணன், இந்தியா விடுதலை அடைந்து ஒரு பொன் உலகமாக மாற வேண்டும் என்கிற கனவுகளோடு தான், உழைக்கும் மக்கள், தொழிலாளிகள், விவசாயிகள், அனைத்து சமூக மக்களும் ஒன்று கூடி
போராடியதாகக் குறிப்பிட்டார். ஆனால், 75 ஆண்டுகள் கடந்த பின்பும் அந்த கனவுகள் நினைவாக்கப்படவில்லை என்பது தான் வேதனையாக உள்ளது. ஆனால், அரசியல் சாசனம் வகுத்தளித்துள்ள விழுமியங்களை எல்லாம், இன்று பறிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.
மதச்சார்பற்ற மத நல்லிணக்கத்தோடு வாழ வேண்டும் என விடுதலை பெற்ற நாம் இன்று மத வெறி பிடித்த ஆட்சியின் கீழ் இருப்பதால், மத வெறியும், சாதி வெறியும்
தலைவிரித்து ஆடுவதாக விமர்சித்தார். மோடி தலைமையிலான அரசு, கார்பரேட்களுக்கு முழு சுதந்திரம் அளித்து மக்களை நடுவீதியில் நிறுத்துகிற நிலை ஏற்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார். எனவே, இந்தியா பொருளாதார சுதந்திரத்தை அடைகிற 2வது சுதந்திர போராட்டத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முன்னெடுக்க வேண்டும் என்றார்.
-ம.பவித்ரா