மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் பயன்படுத்தும் செல்போன்களை மட்டுமே குறி வைத்து திருடும் திருடனை போலீசார் கைது செய்துள்ளனர்.
சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் இரு தினங்களுக்கு முன்பு ஒரே நாளில் இரண்டு மருத்துவர்கள் மற்றும் ஒரு செவிலியர் செல்போன் திருடுபோய் உள்ளது. இந்த சம்பவம் குறித்து புகாரின் பேரில் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை போலீசார் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர்.
விசாரணையில் மூன்று செல்போன்கள் திருட்டு சம்பவத்திலும் ஈடுபட்டது ஒரே நபர் தான் என தெரிய வந்தது. இதனையடுத்து சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் வியாசர்பாடி பகுதியைச் சேர்ந்த முனியாண்டி என்பவரை பர்மா பஜாரில் சுற்றிவந்த போது கைது செய்தனர். போலீசார் விசாரணையில் அரசு மருத்துவமனை மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களை மட்டுமே குறிவைத்து இவர் கடந்த 5 ஆண்டுகளாக செல்போன் திருட்டில் ஈடுப்பட்டு வந்துள்ளார்.
குறிப்பாக ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை, ஸ்டான்லி அரசு மருத்துவமனை, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை, ராயபேட்டை அரசு மருத்துவமனை, திருவள்ளூர் அரசு மருத்துவமனை, திருப்பதி அரசு மருத்துவமனை தமிழகம், ஆந்திரா, கர்நாடக என பல பகுதிகளில் உள்ள அரசு மருத்துவமனைகளை மட்டுமே குறிவைத்து மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களின் செல்போன்களை திருடி வந்துள்ளார் என தெரிய வந்தது.
முனியாண்டி உடலில் தீக்காயங்கள் இருந்ததாலும், மாற்றுதிறனாளி என்பதால் மருத்துவம் பார்ப்பதாக கூறி மருத்துவமனைக்குச் சென்று மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களின் செல்போன்களை தொடர்ச்சியாக திருடி வந்துள்ளார். குறிப்பாக மருத்துவமனை செல்லும் போது கையில் ஒரு நோட்டுடன் சென்று மருத்துவமனை ஊழியர் போன்று காட்டிக் கொண்டு மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் நோயாளிகளிடம் பேசிக் கொண்டிருக்கும் போது எதிர்பாராத நேரத்தில் மின்னல் வேகத்தில் அவர்களின் செல்போன்களை நோட்டை வைத்து மூடி திருடி வந்துள்ளார்.
தமிழகம் ஆந்திரா, கர்நாடக ஆகிய மாநிலத்திள்ள அரசு மருத்துவமனைகள் என மொத்தமாக 200 க்கும் மேற்பட்ட விலை உயர்ந்த செல்போன்களை திருடியுள்ளார் என்பது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களிடம் திருடிய ஐபோன், ஒன்பிளஸ் போன்ற உயர் ரக செல்போன்களையும் பர்மா பஜார் மற்றும் ரிச் தெருக்களில் ரூ.2 ஆயிரம் முதல் ரூ.5 ஆயிரம் விலைக்கு விற்று அதன் மூலம் கிடைக்கும் பணத்தை வைத்து மது மாது என சொகுசாக வாழ்ந்து வந்துள்ளார் என்பது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.
தனது கையை அகற்றியதால் மருத்துவர்களை தனக்கு பிடிக்காது எனவும் அதனால் அவர்கள் செல்போன்களை மட்டுமே திருடி வருவதாகவும் பொதுமக்கள் செல்போன்களில் கை வைக்க மாட்டேன் அவர்கள் பாவம் எனவும் முனியாண்டி வாக்குமூலம் அளித்துள்ளார். இதனையடுத்து கைது செய்யப்பட்ட முனியாண்டியை போலீசார் சிறையில் அடைத்தனர்.







