கேரளாவில் வீட்டிற்கு வந்த காதலனுக்கு விஷம் கலந்த குளிர்பானத்தை கொடுத்து காதலி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலம், பாறசாலை பகுதியைச் சேர்ந்த ஷரோன் என்பவர் கன்னியாகுமரியில் உள்ள தனியார் கல்லூரில் இறுதியாண்டு படித்து வந்த நிலையில், இவருடன் பயின்ற கிரீஷ்மா என்பவரை காதலித்து வந்துள்ளார். இவர்களின் காதலுக்கு கிரீஷ்மாவின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், மகளுக்கு அவரசமாக திருமணம் செய்ய முடிவு செய்தனர். முதலில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்த கிரீஷ்மா, பின்னர் பெற்றோரின் விருப்பத்திற்கு சம்மதித்த நிலையில், காதலுடனான உறவை முறித்து கொண்டார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்த சூழலில், கடந்த 14-ம் தேதி கிரீஷ்மா வீட்டிற்கு சென்ற காதலன் ஷரோனுக்கு குடிக்க குளிர்பானம் கொடுத்துள்ளனர். அந்த குளிர்பானத்தை குடித்தபின் உடல்நலம் பாதிக்கப்பட்ட ஷரோன், திருவனந்தபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். ஆனால், கடந்த 25-ம் தேதி அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனிடையே, தனது மகனுக்கு விஷம் கலந்த குளிர்பானத்தை வழங்கி கிரீஷ்மா கொலை செய்ததாக அவரது தந்தை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இதனை தொடர்ந்து கிரீஷ்மாவை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அதில், வீட்டிற்கு வந்த ஷரோனிடம் தன்னுடனான காதலை முறித்து கொள்ளுமாறு வலியுறுத்தியதாகவும், இல்லாவிட்டால் தனது தாத்தா பயன்படுத்தி வந்த கஷாயத்தை குடித்து உயிரை விடுவதாக கூறியதாகவும் வாக்குமூலம் அளித்துள்ள கிரீஷ்மா, ஆனால் ஷரோனே அந்த கஷாயத்தை எடுத்து குடித்ததாகவும் தெரிவித்துள்ளார்.
ஆனால், கிரீஷ்மா அளித்த தகவலை நம்பாத போலீசார், வேறு நபருடன் திருமணம் செய்து கொள்ள ஷரோன் கொலை செய்யப்பட்டாரா? அல்லது முதல் கணவரை கொன்று விட்டு இரண்டாம் தரம் கணவருடன்தான் வாழ்க்கை நடத்த முடியும் என்ற மூடநம்பிக்கையில், காதலனை கொலை செய்தாரா உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரித்து வருகின்றனர். கைது செய்யப்பட்ட கிரீஷ்மாவை, நெய்யாற்றின் கரை நீதிமன்றத்தில் போலீசார் இன்று ஆஜர்படுத்துகின்றனர்.